தமிழ்நாட்டின் மிக முக்கிய திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் மூன்று தரப்புகளுக்கு இடையில் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது.
கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தலைமைப் பொறுப்பு தனக்கே என்பதை தற்காலிகமாக மெய்ப்பித்து இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலகத்தை தன் வசப்படுத்த நீதிமன்றத்தை நாடி மனு செய்து இருக்கிறார். அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
அதே வேளையில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைச் செல்லாது என்று அறிவிக்கும்படி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக நேற்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பரபரப்பாக அறிவித்தது.
கட்சியின் பொருளாளராக இன்னமும் தானே இருப்பதாகச் சொல்லி, சென்னை மைலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கிக்கு கடிதம் எழுதி, கட்சிக் கணக்குகளை நிர்வகிக்க வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று பன்னீர் தரப்பு வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளது. அதிமுகவுக்கு கடந்த 2020-21ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.260.16 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, கொலை நோக்கத்துடன் தன் தரப்பு தொண்டர்களைத் தாக்க முயன்றதாக பன்னீர் தரப்பு மீது நேற்று காவல்துறையில் பழனிசாமி தரப்பு புகார் செய்தது. அதிமுக தலைமை அலுவலகம் அருகே திங்கட்கிழமை மோதலில் ஈடுபட்ட 400 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்சித் தொண்டர்களிடம் ஆதரவு திரட்டி வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, பழனிசாமி அரங்கேற்றி இருக்கும் நாடகமும் பன்னீர் செல்வத்தை நீக்கியதும் அறவே செல்லாது என்று புதுக்கோட்டையில் தெரிவித்தார். கட்சி விரைவில் தன் தலைமையில் பலமடையும் என்றாரவர்.
மேலும் செய்தி பக்கம் 7ல்

