இலங்கையில் திடீர் திருப்பம்; அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகவில்லை
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று அதிபர் மாளிகைக்குள் ஆர்ப்பாட் டக்காரர்கள் புகுந்ததால் அங் கிருந்து ரகசியமாக வெளியேறிய கோத்தபயா ராஜபக்சே நேற்று மாலத்தீவில் தஞ்சம் அடைந்து உள்ளார்.
முன்னதாக அவர் பதவி விலக முன்வந்துள்ளார் என்றும் புதியவர் ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோத்தபாய ராஜபக்சே வெளிநாடு சென்றுள்ளதால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நேற்று அறிவித்தார்.
கோத்தபாய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவியில் இருக்கக்கூடாது என்று ஆயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"தான் நாட்டில் இல்லாததால் அரசியலமைப்புக்கு உட்பட்டு அதிபராக செயல்பட பிரதமரை நியமித்துள்ளதாக அதிபர் கோத்த பாய ராஜபக்சே என்னிடம் தெரிவித்தார்," என்று தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் நாயகர் மகிந்த யாப்பா தெரிவித்து இருந்தார்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டுத் தப்பியோடிய சில மணி நேரங்களில் நாடு முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட மேற்கு மாநிலங்கள் முழுவதும் காலவரம்பு இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று பிரதமர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். சிலர் சுவர் ஏறி வீட்டிற்குள் நுழையவும் சிலர் அலுவலக நுழைவாயிலின் கதவை உடைக்கவும் முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப் பதற்காக வானத்தை நோக்கி காவல்துறையினர் சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபரின் இரு சகோதரர் களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயும் முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சேயும் இன்னமும் இலங்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் கொழும்புக்கு அருகே உள்ள அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஆகாயப் படை விமானம் மூலம் மாலத்தீவு சென்றதாக ஆகாயப் படையின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால் மாலத்தீவில் அவர் தொடர்ந்து தங்க மாட்டார், அங்கிருந்து அவர் வேறு ஒரு நாட்டுக்குச் செல்வார் என்றும் மாலத்தீவில் அவர் தங்க வசதிகள் ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளதகாகவும் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபாய ராஜபக்சே முதலில் துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார். விமான நிலையத்திலும் கடற்படைத் தளத்திலும் மக்கள் குவிந்ததால் அவர் வெளியேற முடியவில்லை. பின்னர் சவூதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிடம் அவர் உதவி கேட்டதாக நம்பப்படுகிறது. இரு நாடுகளிலிருந்தும் சாதகமான பதில் வராதததால் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், அமெரிக்காவிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு அமெரிக்காவும் மறுத்துவிட்டது.
பின்னர் இந்தியாவின் உதவியை அவர் நாடியிருக்கிறார். விமானம் மூலம் செல்ல முடியாததால் கடல் வழியாக இந்தியா சென்று, அங்கிருந்து துபாய் செல்ல அவர் அனுமதி கேட்டுள்ளார்.
இந்தியாவும் சாதகமான பதில் அளிக்காத நிலையில் தனியார் விமானம் மூலம் அவர் மாலத்தீவு சென்றதாக வேறு ஒரு தகவல் தெரிவிக்கிறது.

