புதிய இலங்கை அதிபரைத் தேர்ந்து எடுப்பதிலும் ராஜபக்சேக்களின் செல்வாக்கில் இருந்து இடைக்கால அரசாங்கத்தை விடுவிப்பதிலும் அந்நாட்டு அரசியல் கட்சிகள் தடுமாறி வருகின்றன.
இலங்கையில் வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியை அரசாங்கம் கையாண்ட விதத்தைக் கண்டித்து பொங்கி எழுந்த மக்கள் போராட்டம் 100 நாள்களைக் கடந்துள்ளது.
ஆளும் கட்சியின் ஆதரவுடன் புதிய அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்படக்கூடிய ரணில் விக்ரமசிங்க, இலங்கை மக்களிடையே பிரபலமானவராக இல்லை. திரு கோத்தபாய ராஜபக்சேவைப்போல இவரும் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விடாப்படியாகப் போராடு கின்றனர்.
அதையும் மீறி திரு ரணில் விக்ரமசிங்க அதிபராக நியமிக்கப்பட்டால், நாட்டில் அமைதியின்மை மேலும் மோசம் அடையும் சாத்தியம் நிலவுகிறது.
இந்நிலையில், இடைக்கால அதிபரான திரு ரணில் நேற்று முன்தினம் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளதாக அரசாங்கம் நேற்று முன்தினம் பின்னேரத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
"பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுக் கட்டொழுங்கு, அத்தியாவசிய சேவைகளின் விநியோகம் போன்றவற்றைக் கருதி அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவது உகந்த நடவடிக்கையே," என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தனது செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கை அரசாங்கம் பலமுறை அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது.
திரு கோத்தபாய அதிபர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால், திரு கோத்தபாய நாட்டைவிட்டு தப்பி ஓடினார்.
அதையடுத்து, திரு ரணில் கடந்த வாரம் இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இருந்தார்.
அவருடைய அந்த உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டதா அல்லது காலாவதியாகிவிட்டதா அல்லது, ஜூலை 15ஆம் தேதி இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றபின் திரு ரணில் அந்த உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளாரா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதுகுறித்து கருத்து கேட்டதற்கு திரு ரணில் அலுவலகம் பதிலளிக்கவில்லை.
அண்மையில் பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த அவசரநிலை பிரகடனத்தில் இடம்பெறும் சட்ட வரம்பு குறித்து நேற்றைய நிலவரப்படி அரசாங்கத்திடம் இருந்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், இதற்கு முன்பு அவசரநிலை நடப்பில் இருந்தபோது ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கி அவற்றில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய ராணுவத்தினர் வீதிகளில் களமிறக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்றுக் காலை நிலவரம் அமைதியாக இருந்தது. வாகனமோட்டிகளும் பாதசாரிகளும் வீதிகளில் சென்ற வண்ணம் இருந்தனர்.
நாட்டில் பசி, பட்டினி
நாட்டில் மிக மோசமான பொருளியல் நெருக்கடி நிலவுவதால், இலங்கை மக்கள் பொருள்களை வாங்குவது, சாப்பிடுவது, வேலை செய்வது ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டு உள்ளனர்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நாட்டில் பணவீக்கம் 80.1 விழுக்காட்டை எட்டி உள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக உணவுத் திட்டத்தைப் பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் இலங்கை மக்களுக்கு உணவு உண்ண உதவி தேவைப்படுகிறது. இந்த எண்ணிக்கை, நாட்டின் மக்கள்தொகை 22 விழுக்காடாகும்.
இதற்கிடையே, 'மக்கள் போராட்ட பிரஜைகள்' என்ற புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
சில கும்பல்கள் போராட்டத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் மக்களின் விருப்பங்களுக்காக தொடர்ந்தும் நிற்கும் எனவும் மக்கள் போராட்டக் கட்சி, மக்கள் அமைப்பின் செயலாளர் சானக பண்டார தெரிவித்தார்.
எத்தகைய சவால்கள் வந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார் அவர்.

