இந்தியாவின் புதிய அதிபராக பாஜக தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக நேற்றிரவு வரையிலான நிலவரங்கள் தெரிவித்தன. இந்திய அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொடக்கம் முதலே திரௌபதி முர்மு முன்னிலை வகித்தார்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்றிரவு சுமார் 9.30 மணிவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திரௌபதி முர்மு சுமார் 71% வாக்குகளைப் பெற்றிருந்தார். அச்சமயம் ஆங்கில அகர வரிசைப்படி 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டிருந்தன. இரண்டாவது சுற்றின் முடிவில் திரௌபதி முர்முவுக்கு 1,349 வாக்குகள் கிடைத்தன.
அவரை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர் யஷ் வந்த் சின்ஹாவுக்கு 537 வாக்குகள் மட்டுமே கிடைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
எனினும், இரவு 9.30 மணி நிலவரப்படி திரௌபதி முர்மு, பதிவான மொத்த வாக்குகளில் 51 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்றை இந்திய ஊடகங்கள் வெளியிட்டன.
இச்செய்தியை உறுதிசெய்யும் விதமாக இரவு சுமார் 9.30 மணியளவில் தமது டுவிட்டர் பக்கத்தில் 'நன்றி...ஜெய்ஹிந்த்' எனப் பதிவிட்டிருந்தார் திரௌபதி முர்மு.
இதையடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அவரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

