இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன
இலங்கையின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, நாட்டின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு முன்பாக, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.
இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பதவியேற்ற அடுத்த நாள் குணவர்தன பிரதமராக பதவியேற்றார்.
பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான குணவர்தனவை ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அதிபர் ரணில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குணவர்தனவின் பதவியேற்புக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னதாக, இலங்கைத் தலைநகர் கொழும்பில் அரசாங்க வளாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டிருந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த முகாம்களின் ஒரு பகுதியை அப்புறப்படுத்திய அவர்கள், குறைந்தது ஒன்பது பேரைக் கைது செய்தனர்.
கலகத் தடுப்பு உபகரணங்களை அணிந்து, துப்பாக்கிகளை வைத்திருந்த ராணுவத்தினர், முகாம்களைக் கிழித்தெறிவதைக் காட்டும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. இலங்கையில் இதுவரை இல்லாத பொருளியல் நெருக்கடி நிலவிவரும் வேளையில், அரசாங்கத்தின் செயல்பாட்டைக் கண்டித்து வீதிகளில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த ஏப்ரலில் இந்த முகாம்களை அமைத்து இருந்தனர்.
"ராணுவத்தினர், காவல்துறையினர், காவல்துறையின் சிறப்புப் படைகள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை அதிகாலையில் தொடங்கியது. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து அதிபர் செயலகத்தை மீட்டெடுப்பது இதன் நோக்கம். செயலகத்தைக் கைப்பற்ற அவர்களுக்கு சட்ட உரிமை எதுவும் கிடையாது," என்று காவல்துறை பேச்சாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அதிபர் பதவியில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சேவின் நண்பராகப் பார்க்கப்படும் ரணில் புதிய அதிபராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் களத்தில் இறக்கப்படுவர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அஞ்சினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் முகாம்களைச் சுற்றிவளைத்து அவற்றின் ஒரு பகுதியை அப்புறப்படுத்தியதாக ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் கூறினர்.
அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் இருந்த பிரதான சாலையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டு இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்கள், விடியற்காலையில் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன.
பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையில் குறைந்தது 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். அவர்களில் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் சிலரும் அடங்குவர். காயமடைந்தவர்களில் குறைந்தது இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடிச் சோதனையை நேரில் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான புத்திகா அபேரத்ன, 34, "பாதுகாப்புப் படையினர் எங்களைப் படுமோசமாகத் தாக்கினர். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனநாயகம் என்னவென்று தெரியவில்லை," என்று சொன்னார்.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து இலங்கையில் அவசரநிலை நடப்பில் இருந்து வருகிறது. பாதுகாப்புப் படையினர், அதிபர் செயலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக, அதிபர் செயலகத்துடன் அதிபர் மற்றும் பிரதமரின் இல்லங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி இருந்தனர். நாட்டைவிட்டு கோத்தபாய தப்பிச்சென்றதைத் தொடர்ந்து அவர்களது இல்லங்களைவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறினர்.
அதிபர் செயலகத்தை நேற்று பிற்பகல் அரசாங்கத்திடம் தாங்கள் ஒப்படைக்க இருந்ததாக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவர் ராய்ட்டர்சிடம் கூறினார். ஆனால், இதுகுறித்து தனக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.
ஆர்ப்பாட்டக்கார்களை ஒடுக்கும் பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கை, நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைத்து விடக்கூடும் என்று இலங்கை வழக்கறிஞர் சங்கம் கூறி உள்ளது.

