உக்ரேனும் ரஷ்யாவும் இதுவரை தப்பிப் போய்க்கொண்டிருந்த தானிய ஒப்பந்தம் ஒன்றில் நேற்று கையெழுத்திட இருந்தன.
கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளதால் உலகளவில் கடுமையான உணவு நெருக்கடி நிலவி வருகிறது. இதைத் தணிக்க இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியதில் இருந்து இவற்றுக்கு இடையே எட்டப்படும் பெரிய அளவிலான முதல் ஒப்பந்தம் இதுவாகும். ரஷ்யப் படையெடுப்பு காரணமாக உலகளவில் உணவு விலைகள் கிடுகிடுவென உயர்ந்து உள்ளன.
இந்நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற இருந்த இந்தக் கையெழுத்துச் சடங்கைப் பார்வையிட ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் ஆண்டோனியோ குட்டாரெஸ் நேற்று முன்தினம் துருக்கி செல்ல இருந்தார்.
"உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான இந்த தானிய ஏற்றுமதி உடன்பாடு, இஸ்தான்புலில் கையெழுத்தாகும். துருக்கிய அதிபர் ரெசிப் தய்யிப் எர்துவான், ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்டாரெஸ் முன்னிலையில் இது கையெழுத்தாகும்," என்று துருக்கிய அதிபர் பேச்சாளர் இப்ராகிம் கலின் குறிப்பிட்டார்.
உக்ரேனிய துறைமுகங்களில் கிட்டத்தட்ட 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் இதர தானிய வகைகள் பல வாரங்களாக தேங்கிக் கிடக்கின்றன.
இந்த வட்டாரத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து தானியங்களும் கருங்கடல் வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகின் ஆகப்பெரிய தானிய உற்பத்தி நாடுகளான உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஐந்து மாதங்களாக நீடித்து வருகிறது.

