இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேயைக் கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரின் தலைமை சட்ட அதிகாரியிடன் குற்றவியல் புகார் அளித்துள்ளது ஓர் அனைத்துலக மனித உரிமைக் குழு.
தென் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட 'தி இண்டர்னேஷனல் ட்ரூத் ஆத் ஜஸ்டிஸ் புரொஜெக்ட்' (The International Truth and Justice Project - ITJP) எனும் மனித உரிமைக் குழு திரு ராஜபக்சே 2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிய பெரும் மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்ததாக அந்தக் குழு புகார் அளித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அந்த புகாரின் நகலைப் பார்த்ததாகச் செய்தி வெளியிட்டிருந்தது.
அனைத்துலகச் சட்டங்களின் கீழ் திரு ராஜபக்சே மீது சிங்கப்பூரில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் ITJP குழு குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தின் வழியாக திரு ராஜபக்சேவிடம் கருத்து கேட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் இலங்கை போரின்போது தம்மீது சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்களை திரு ராஜபக்சே நிராகரித்திருந்தார்.
இலங்கையைவிட்டு மாலத்தீவுக்குத் தப்பிச் சென்று பின்னர் சவூதி அரேபியா விமானம் மூலம் ஜூலை 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தார்.
திரு ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சம் கோரவில்லை என்றும், அவருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அடைக்கலம் தரவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. சிங்கப்பூர் பொதுவாக தஞ்சம் அளிப்பதில்லை என்று அது கூறியது. அவர் தனிப்பட்ட முறையில் இங்கு வந்திருப்பதாகவும் அமைச்சு அப்போது குறிப்பிட்டது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தனிநாடு கேட்டு போரில் ஈடுபட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு 2009ஆம் ஆண்டு போர் தொடுத்து விடுதலைப் புலிகள் படைகளை முற்றிலுமாக அழித்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.