சென்ற ஜூன் மாதத்தில் விலைவாசி உயர்வு தொடர்ந்ததை அடுத்து, ஆண்டு அடிப்படையிலான மூலாதாரப் பணவீக்கம் 4.4 விழுக்காட்டை எட்டியது.
தங்குமிடம், தனியார் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்த்த மூலாதரப் பணவீக்கம், 2008 நவம்பர் மாதத்திற்குப் பிறகு இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை.
முன்னதாக, ஜூன் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் 3.8 விழுக்காடாக இருக்கும் என்று யுஓபி வங்கியும் 3.9 முதல் 4.5 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று புளூம்பெர்க் நிறுவனமும் கணித்திருந்தன.
கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்வு கண்டது. ஆண்டு அடிப்படையில், அது 6.7 விழுக்காடாக உயர்ந்தது. தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளின் அதிகரிப்பே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
இது, புளூம்பெர்க்கின் 5.8%, யுஓபி வங்கியின் 6.2% என்ற கணிப்புகளை மிஞ்சியது.
இதனையடுத்து, ஆண்டு முழுமைக்குமான முன்னுரைப்புகளும் திருத்தப்பட்டு, உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 5 முதல் 6 விழுக்காட்டிற்கு இடைப்பட்டும் மூலாதாரப் பணவீக்கம் 3 முதல் 4 விழுக்காட்டிற்கு இடைப்பட்டும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 4.5 விழுக்காடாக இருந்த உணவுப் பணவீக்கம் அதனை அடுத்த ஜூன் மாதத்தில் 5.4 விழுக்காடாக அதிகரித்தது. சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று வெளியிட்ட தரவுகள் இதனைக் காட்டின.
உணவு சேவைகள் மற்றும் சமைக்கப்படாத உணவுப்பொருள்களின் விலை உயர்வே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
விடுமுறைக்காலச் செலவுகளும் விமானக் கட்டணங்கள் உள்ளிட்ட போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்ததால் சேவைகளுக்கான பணவீக்கம் 3.4 விழுக்காடாக ஏற்றம் கண்டது.
சில்லறை மற்றும் இதர பொருள்களைப் பொறுத்தமட்டில், மே மாதத்தில் 1.8 விழுக்காடாக இருந்த பணவீக்கம் 3.1 விழுக்காடாக அதிகரித்தது. மருந்துப்பொருள்கள், ஆடைகள், காலணிகள் போன்றவற்றின் விலையேற்றம் இதற்கு வித்திட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்களும் 20% வரை கூடின.
வீட்டு வாடகை கூடியதால் தங்குமிடப் பணவீக்கம் 4.2 விழுக்காடாக உயர்ந்தது. அதுபோல, கார் விலைகளும் எரிபொருள் செலவுகளும் கூடியதால் தனியார்ப் போக்குவரத்துச் செலவுகள் 21.9% கூடின.
வரும் மாதங்களிலும் பணவீக்க நெருக்கடி நீடிக்கும் என்று நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்துள்ளன.
மூலாதாரப் பணவீக்கம் மூன்றாம் காலாண்டில் உச்சத்தை எட்டும் என்றும் அதன்பின்னர் தணியத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கார் விலை, தங்குமிடச் செலவு அதிகரிப்பு இவ்வாண்டில் தொடர்ந்து நீடிக்கக்கூடும்.

