ஆறு மாதம் முதல் நான்கு வயது வரைப்பட்ட குழந்தைகளுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி தயாராகவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
"ஆறு மாதங்களில் இருந்து நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கான கொவிட்-19 தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுத்து வருகிறது. இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் அதற்கு ஆயத்தமாக இலக்கு கொண்டுள்ளோம்," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
கடந்த இரு மாதங்களில் நான்கு வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகள் கொவிட்-19 தொற்றால் மாண்டுபோயினர்.
நான்கு வயதிற்குட்பட்ட பிள்ளைகள் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் விகிதம், நிமோனியா, இன்ஃபுளுவன்சா போன்ற தொற்றுநோய்களுடன் ஒப்பிடும் வகையில் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
"நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை, இவ்வாண்டில் கொவிட்-19 தொற்று உயிரிழப்பு விகிதம் 100,000 பேருக்கு மூன்று பேர் என்ற அளவில் இருக்கிறது. ஒப்புநோக்க, 40 மற்றும் அதற்குமேல் வயதுடையோரில் இவ்விகிதம் 100,000 பேருக்கு 99 பேர் என்ற அளவில் உள்ளது," என்று அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 பரவலுக்குமுன், 2018, 2019ஆம் ஆண்டுகளில் 100,000 பேருக்கு 3.1 பேர் என்ற விகிதத்தில் நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிமோனியாவாலும் இன்ஃபுளுவன்சாவாலும் மாண்டுபோனதாக அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 1.7 மில்லியன் பேரில், கிட்டத்தட்ட 64,000 பேர், அதாவது 3.9 விழுக்காட்டினர் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகள்.
அவர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்தே குணமடைந்ததாகவும் 0.022 விழுக்காட்டினருக்கு மட்டுமே செயற்கையாக உயிர்வாயு அளிக்கப்பட வேண்டியிருந்தது அல்லது மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது என்றும் அமைச்சு தெரிவித்தது.

