இந்திய அதிபராக பதவியேற்ற முதல் பழங்குடியினப் பெண் என்ற சாதனையை நேற்று படைத்தார் திருவாட்டி திரௌபதி முர்மு, 64.
முன்னாள் பள்ளி ஆசிரியையான திருவாட்டி முர்மு, கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் 64% வாக்குகளைப் பெற்று வாகைசூடினார்.
ஒடிசா மாநிலத்தில் பிறந்த சந்தால் பழங்குடி இனத்தவரான திருவாட்டி முர்மு, அதிபராகப் பதவியேற்குமுன் டெல்லியிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று வணங்கினார்.
அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டபின் முதன்முறையாக அதிபராக அவர் உரையாற்றினார்.
"இந்தியாவில் ஏழைகள் கனவு கண்டு, அதனை நனவாக்கலாம் என்பதற்கு நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே சான்று. சிறுவயதில் நான் தொடக்கக் கல்வி பெறுவதே பெருங்கனவாக இருந்தது. இன்று நான் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளேன். அதிலும், நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் நான் அதிபராகத் தேர்வாகியிருப்பது பெருமிதம் அளிக்கிறது.
"நான் அதிபராகப் பதவியேற்றிருப்பது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. அது இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் சாதனை; ஏழை எளிய மக்களின் கனவு மெய்ப்படும் என்பதை உறுதிப்படுத்தும் சாதனை," என்று திருவாட்டி முர்மு பேசினார்.
நாட்டிலுள்ள பெண்கள், இளைஞர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்துவேன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, திரௌபதி என்பது தம் பெற்றோர் தமக்குச் சூட்டிய பெயரல்ல என்றும் 'புத்தி' என்ற தமது பெயர் பிடிக்காததால் தம் ஆசிரியர் ஒருவர் தமக்கு அப்பெயரைச் சூட்டினார் என்றும் ஓர் ஒரிய மொழி காணொளிச் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலின்போது அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

