பதவி இழந்த முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புவார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு பெரும் புரட்சி செய்ததன் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிய கோத்தபாய சிங்கப்பூரில் தங்கி உள்ளார்.
அவருக்கு 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் கூறியுள்ளது. அச்செய்தியின்படி, ஜூலை 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்த கோத்தபாயவின் விசா நாளை முடிவடையவுள்ளது. இந்நிலையில், கோத்தபாய விரைவில் நாடு திரும்புவார் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் பன்டுல குணவர்த்தன நேற்றுக் காலை கூறினார்.
“கோத்தபாய நாட்டைவிட்டு ஓடியதாகவோ ஒளிந்திருப்பதாகவோ நான் நம்பவில்லை. உண்மையில் முறையான அதிகாரத்துவ விதிகளைப் பின்பற்றி அவர் வெளிநாடு சென்றிருக்கிறார்,” என்றும் டாக்டர் குணவர்த்தன தெரிவித்தார்.