குறைந்தது ஐவர் மரணம்; 60க்கும் மேற்பட்டோர் காயம்
பிலிப்பீன்சின் வடமாநிலங்களை நேற்றுக் காலை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம், அப்பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டசன் கணக்கான நிலச்சரிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம், வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்கள் உட்பட 170க்கும் அதிகமான கட்டடங்களுக்கு பெருஞ்சேதம் விளைவித்து உள்ளது.
நிலநடுக்கத்தால் குறைந்தது ஐவர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக குடிமைத் தற்காப்பு அலுவலகம் தெரிவித்தது.
ரிக்டர் அளவில் 7 எனப் பதிவான நேற்றைய நிலநடுக்கம், 1990ல் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தின் நினைவலைகளைக் கொண்டு வந்தது. அந்த நிலநடுக்கத்தால் அரசாங்கப் பள்ளியும் ஹோட்டலும் கவிழ்ந்ததில் 1,600க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
இம்முறை உயிர்ச்சேதம் அவ்வளவு அதிகமாக இருக்காது என ஆரம்பகட்ட தகவல்கள் குறிப்பிட்டன. எனினும், 1990 நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கிட்டத்தட்ட அதே அளவு பொருட்சேதம் இம்முறையும் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8.43 மணிக்கு ஏற்பட்டதாக பிலிப்பீன்ஸ் எரிமலையியல், நிலநடுக்கவியல் கழகம் குறிப்பிட்டது. மலைப்பகுதிகள் அதிகம் உள்ள அப்ரா மாநிலத்தின் டொலொரஸ் பகுதிக்கு தென்கிழக்கே 11 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
"இந்த நிலநடுக்கத்தை நாங்கள் கடுமையானதாகக் கருதுகிறோம். இதனால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று கழக இயக்குநர் ரெனாட்டோ சொலிடம் செய்தியாளர்களிடம் கூறினார்.
நிலநடுக்கத்தின் தாக்கம், 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் மணிலா வரை உணரப்பட்டது. மெட்ரோ மணிலாவில் உள்ள உயர்மாடிக் கட்டடங்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன. அலுவலக, அரசாங்கக் கட்டடங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். ரயில்வே சேவையும் பள்ளி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது தம் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்றில் தாம் பங்கேற்று இருந்ததாக பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் கூறினார்.
அப்ரா மாநிலத்திலும் லுஸோன் தீவின் வடபகுதிகளில்தான் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலநடுத்தால் 15 மாநிலங்கள், 15 நகர்கள், 280 சிறு நகர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பெஞ்சமின் அபாலோஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
சாலை மார்க்கமாக இந்தப் பகுதிகளைச் சென்றடைவது தற்போது சவாலாக உள்ளது. நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள சேதத்தால் நூற்றுக்கணக்கான சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டு இருப்பதும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதே இதற்குக் காரணம். அப்ரா மாநிலத்தில் குறைந்தது 58 நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக திரு அபாலோஸ் குறிப்பிட்டார். அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தததைத் தொடர்ந்து அதிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பிலிப்பீன்சில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம், பல ஆண்டுகளில் இல்லாத அளவு ஆகக் கடுமையானதாக பதிவானது.
அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தூதர்கள், பிலிப்பீன்ஸ் மக்களுக்கு பிரார்த்தனைகளையும் ஆதரவையும் வழங்கினர்.
அப்ரா மாநிலத்தையும் பாதிக்கப்பட்டுள்ள பிற பகுதிகளையும் தாம் இன்று பார்வையிட இருப்பதாக அதிபர் மார்கோஸ் கூறினார்.

