மலேசியாவின் பல பகுதிகளில் நேற்று பிற்பகல் மின்தடை ஏற்பட்டது. மின்தடை ஏற்பட்ட மூன்று மணி நேரத்தில் அது சரிசெய்யப்பட்டது. மின்தடையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பிற்பகல் 3.02 மணிக்குள் மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக தேசிய பயனீட்டு நிறுவனமான தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்தது.
"மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளிலும் மின்சார விநியோகம் 20 நிமிடங்களில் கட்டங்கட்டமாக மீட்டெடுக்கப்பட்டது.
பிற்பகல் 12.39 மணிக்கு மின்தடை தொடங்கியது. ஜோகூரில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயே இதற்கான காரணம் என்று தெனாகா நேஷனல் நிறுவனம் கூறியது. இதனால் மலேசிய தீபகற்பத்தில் மொத்த மின் விநியோகத் தேவையில் 10 விழுக்காடு அளவு பாதிப்பு ஏற்பட்டது.
பினாங்கு, பாகாங், நெகிரி செம்பிலான், கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.
சிலாங்கூர் மாநிலத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளடக்குகிறது. பங்சார், செராஸ், ஷா ஆலம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
மின்தடை ஏற்பட்டது குறித்து மலேசியர்கள் பலரும் டுவிட்டரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பினாங்கு, பாகாங் மாநிலங்களில் உள்ள சில பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. ஆனால், ஒரு மணி நேரத்திற்குள் மின் விநியோகம் அங்கு வழக்கநிலைக்குத் திரும்பியது.
மின்தடை காரணமாக கோலாலம்பூரில் போக்குவரத்து விளக்குகள் பலவும் செயலிழந்தன. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பிரதான முனையமும் பாதிக்கப்பட்டது. மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரத்தில் அது சரிசெய்யப்பட்டதாக விமான நிலையம் டுவிட்டரில் தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்து நிறுவனமான ரேப்பிட்கேஎல், மின்தடையால் தன் சேவை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.

