இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, சிங்கப்பூரில் இன்னும் சிறிது காலம் தங்குவார் எனத் தெரிகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூருக்கு தனியார் பயணம் மேற்கொண்டபோது அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த குறுகியகால வருகை அனுமதி, மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கோத்தபாய இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் பண்டுல குணவர்த்தன நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியிருந்ததைத் தொடர்ந்து, இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கோத்தபாய எப்போது இலங்கை திரும்புவார் என்பது பற்றி தமக்குத் தெரியாது என்றாலும், அவர் ஒளிந்திருக்கவோ நாடு கடத்தப்படவோ இல்லை என்பதை குணவர்த்தன வலியுறுத்தினார்.
கோத்தபாய கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும் இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு அருகே இருக்கும் புறநகர்ப் பகுதியில் உள்ள தம் இல்லத்தில் அவர் வசிக்க விரும்புவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
ஜூலை 14ஆம் தேதி, மாலத்தீவில் இருந்து புறப்பட்ட கோத்தபாய, 73, சவூதியா விமானத்தில் பயணம் செய்து சிங்கப்பூரில் தரையிறங்கினார். இங்கு வந்த அவருக்கு 14 நாள் வருகை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தம் பதவி விலகல் கடிதத்தை கோத்தபாய சமர்ப்பித்தார்.
அடுத்த நாள், இலங்கை நாடாளுமன்றம் கோத்தபாயவின் பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கோத்தபாயவின் நண்பரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் புதிய அதிபராக கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோத்தபாயவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள வருகை அனுமதி ஆகஸ்ட் 11ஆம் தேதி காலாவதியாகும் என அறியப்படுகிறது.
அவர் தொடக்கத்தில் நகரின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். பிறகு தனியார் இல்லம் ஒன்றுக்கு அவர் மாறிவிட்டதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூருக்கு வந்ததில் இருந்து இதுவரை கோத்தபாய பொதுவெளியில் காணப்படவில்லை.

