கொவிட்-19 சூழலால் தாமதமடைந்த 'பிடிஓ' வீட்டுத் திட்டங்கள்
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் காரணமாக தாமதம் அடைந்த தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) எதிர்பார்க்கிறது.
இவ்வாண்டின் முற்பாதியில் 7,200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாக வீவக நேற்று தெரிவித்தது. இந்த எண்ணிக்கை, இதற்கு முந்திய இரண்டு ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைவிட அதிகமாகும்.
இவ்வாண்டு பிப்ரவரி, மே மாத பிடிஓ திட்டங்களின்கீழ் விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளைத் தவிர்த்து, தற்போது கிட்டத்தட்ட 100 வீட்டுத் திட்டங்கள் கட்டப்பட்டு வருவதாக வீவக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இந்தத் திட்டங்களுக்கான காத்திருப்புக் காலம் இரண்டு முதல் 5.4 ஆண்டுகள் வரையிலாகும். இடைநிலை காத்திருப்புக் காலம் 4.3 ஆண்டுகளாகும்.
கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட தாமதத்தை முற்றிலுமாக மீட்டெடுக்க முடியாது என்பதை வீவக ஏற்றுக்கொண்டாலும், ஈராண்டுகளாக ஏற்பட்ட கடுமையான இடையூறுக்குப் பிறகு கட்டுமானத் துறை மீட்சியடையத் தொடங்கியுள்ளதாக வீவக தலைமை நிர்வாகி டான் மெங் துவெய் கூறினார்.
"எங்களுடைய ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து வீவக அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது. கட்டுமானப் பணியில் தாமத்தைக் குறைக்க உரிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதுடன் தேவையான வளங்களைப் பெற எங்களுடைய பங்காளிகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்தும் வருகிறோம். அப்போதுதான் வீடு வாங்கியோர் தத்தம் புதிய வீடுகளுக்கு விரைந்து குடிபுக முடியும்," என்று திரு டான் விவரித்தார்.
இவ்வாண்டு இதுவரை கட்டி முடிக்கப்பட்ட 7,200 பிடிஓ வீடுகள் ஆறு திட்டங்களின்கீழ் வருகின்றன. அவற்றில் மூன்று திட்டங்கள், திட்டமிடப்பட்டதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புநோக்க, 2020லும் 2021லும் முறையே 2,485 வீடுகளும் 6,275 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன. எல்லைக் கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்தன.
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள செஞ்சா ரிட்ஜஸ், செஞ்சா ஹைட்ஸ், செஞ்சா வேலி, ஓல்ட் ஏர்போர்ட் சாலை அருகே உள்ள டகோட்டா பிரீஸ், பொங்கோலில் உள்ள நார்த்ஷோர் எட்ஜ், செங்காங்கில் உள்ள ஃபெர்ன்வேல் கிளேட்ஸ் ஆகியன அந்த ஆறு வீட்டுத் திட்டங்கள். இவற்றில் செஞ்சா ரிட்ஜஸ், செஞ்சா ஹைட்ஸ், நார்த்ஷோர் எட்ஜ் ஆகிய திட்டங்கள், திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.
கொவிட்-19 சூழல் காரணமாக கட்டுமானப் பணிகளுக்கு ஏற்பட்ட தாமதத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த ஆறு திட்டங்களுக்காக காத்திருக்கும் காலம் 3.9 முதல் 5.3 ஆண்டுகள் வரையிலாகும். இவற்றுக்கான இடைநிலை காத்திருப்புக் காலம் 4.1 ஆண்டுகளாகும்.
அடுத்த ஈராண்டுகளில் பிடிஓ திட்டங்களுக்கான இடைநிலை காத்திருப்புக் காலம் நான்கு முதல் நாலரை ஆண்டுகள் வரையிலாக இருக்கும் என அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்து இருந்தனர். ஒப்புநோக்க, கொவிட்-19 சூழலில் இது நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக இருந்தது.
இதற்கிடையே, பிடிஓ விநியோகம் 35 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 17,000 வீடுகளாக இருந்த இந்த எண்ணிக்கை, இவ்வாண்டிலும் அடுத்த ஆண்டிலும் 23,000ஆக உயர்த்தப்படுகிறது. பொது வீடமைப்புக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேவையைப் பொறுத்து, 2021 முதல் 2025 வரை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் மொத்தம் 100,000 வீடுகள் வரை கட்டி முடிக்க முடியும்.
திட்டமிட்டப்படி, இவ்வாண்டு 23,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

