வெவ்வேறு இனங்கள், சமயங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் குழுத்தொகுதிக் குழுக்கள் புதியதொரு பெயரைப் பெறவிருக்கின்றன. அதனுடன், தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அவை அதிகரிக்கவுள்ளன.
2002ல் முதன்முறையாக அமைக்கப்பட்ட பல இன, சமய நன்னம்பிக்கை வட்டம் (ஐஆர்சிசி) இன, சமய நல்லிணக்க வட்டமாகப் பெயர் மாற்றம் காணும். அமைதிக் காலத்திலும் நெருக்கடியான சூழலிலும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நம்பிக்கை, புரிந்துணர்வு, தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பணியை இக்குழுக்கள் தீவிரப்படுத்தும்.
மாறிவரும் சமுதாய மனப்போக்கு, சமூக ஊடகங்களால் ஏற்படும் தாக்கம் போன்ற சவால்களை ஐஆர்சிசி சமாளிப்பதை உறுதிசெய்ய பணிக்குழு ஒன்று முன்னெடுத்துள்ள திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கடந்த மார்ச் மாதம் இந்தப் பணிக்குழுவை அமைத்தது. ஐஆர்சிசி தலைவர்கள், இளையர்கள், மகளிர், சமூகப் பங்காளிகள் உள்ளிட்ட 28 உறுப்பினர்கள், ஜூலையில் முடிவடைந்த ஆறு அமர்வுகளில் சந்தித்தனர்.
அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த மாற்றங்களை நேற்று நடைபெற்ற ஐஆர்சிசியின் 20வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் அறிவித்தார்.
பல்வேறு சமூகங்களுக்கு இடையே கூடுதல் கலந்துறவாடலை ஊக்குவிக்க நல்லிணக்க வட்டம் வழக்கமான, ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களைக் கூடுதலாக நடத்த பணிக்குழு பரிந்துரைக்கிறது. சிங்கப்பூரில் 91 ஐஆர்சிசி குழுக்கள் உள்ளன. இவற்றில் 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தொண்டு புரிகின்றனர். இக்குழுக்கள் ஒவ்வோர் ஆண்டும் 250க்கும் அதிகமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. ஜூலை மாதத்தை இன, சமய நல்லிணக்க மாதமாக அர்ப்பணிக்கவும் பணிக்குழு பரிந்துரைத்தது. ஜூலையில் சாலைக்காட்சிகள் போன்ற சமூகக் கொண்டாட்டங்களுக்கு நல்லிணக்க வட்டம் ஏற்பாடு செய்யலாம்.
நல்லிணக்க வட்டத்தில் உறுப்பினராக பள்ளிகள், வர்த்தகக் குழுக்கள் போன்ற உள்ளூர் சமூகப் பங்காளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று பணிக்குழு கூறியது.
கட்டமைக்கப்பட்ட கூடுதலான பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் குழுக்கள் தங்கள் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுமாறும் பணிக்குழு பரிந்துரைத்தது.
ஐஆர்சிசி குழுக்களை அமைப்பதற்கான யோசனையை 2002ல் அப்போதைய பிரதமர் கோ சோக் டோங் முன்வைத்திருந்தார். 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த யோசனை எழுந்தது.
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரான திரு கோ நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இன, சமய பிரிவுகளின்கீழ் சமுதாயம் உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்பதை நாட்டின் நிறுவனர்கள் முதல் நாளிலேயே புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். எனவேதான் இன, சமய வேற்றுமையை வலிமையாக்க அடுத்தடுத்த தலைமுறைகள் கடுமையாக உழைத்ததாக அவர் சொன்னார்.

