தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண நிலைப்பாட்டுக்கும் சட்டப்பிரிவு 377ஏக்கும் இடையே சமநிலை

2 mins read

அரசாங்கம் பரிசீலித்து வருகிறது: அமைச்சர் கா.சண்முகம்

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலு­ற­வைக் குற்­ற­மாக்­கக்கூடாது என முன்­வைக்­கப்­படும் கருத்­து­க­ளுக்­கும் திரு­ம­ணம் குறித்து சிங்­கப்­பூரின் தற்­போ­தைய நிலைப்­பாட்­டைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான விருப்­பத்­துக்­கும் இடையே எவ்­வாறு சிறந்த வகை­யில் சம­நிலை காண்­பது என்­பது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­வ­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரம் குறித்து நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், குற்­ற­வி­யல் தண்­ட­னைச் சட்­டத்­தின் சட்­டப்­பி­ரிவு 377ஏ தொடர்­பில் வெவ்­வேறு தரப்­பி­ன­ரு­டன் அர­சாங்­கம் விரி­வாக கலந்­து­ரை­யா­டி­ய­தாகச் சொன்­னார்.

இந்­தச் சட்­டப்­பி­ரி­வின்­கீழ், பொது­வெ­ளி­யிலோ­ம­றை­வா­கவோ ஆட­வர் ஒரு­வர் மற்­றோர் ஆட­வருடன் பாலியல் உறவு­கொள்­வது குற்­ற­மா­கும். இக்­குற்­றத்­துக்கு ஈராண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

எனி­னும், இந்­தச் சட்­டம் உந்து­தலாக அம­லாக்­கப்­ப­ட­வில்லை. இந்த விவ­கா­ரம் குறித்து 2007ல் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அதி­கா­ரி­கள் இது­கு­றித்த நிலைப்­பாட்டை மறு­உ­று­திப்­ப­டுத்தி உள்­ள­னர்.

வெவ்­வேறு தரப்­பி­னர் உட­னான கலந்­து­ரை­யா­டல்­களில் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, தாவோயிசம் போன்ற சம­யத் தலை­வர்­கள், அடித்­த­ளத் தலை­வர்­கள், வெவ்­வேறு பின்­ன­ணி­க­ளைக் கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள், 'எல்­ஜி­பிடி' குழுக்­கள் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­தாக அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

"தங்­க­ளுக்கு இடையே பாலி­யல் உறவுகொள்­ளும் ஆட­வர்­க­ளைச் சிறை­யில் அடைக்­கக்கூடாது என்­பதைப் பல­ரும் ஏற்­றுக்­கொள்­கின்­ற­னர். ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலு­றவு குற்­ற­மாக்­கப்­ப­டக் கூடாது என்­றும் அவர்­கள் கூறி­னர்.

"அதே­வே­ளை­யில், ஆண்­களுக்கு இடை­யி­லான பாலு­றவு குற்­ற­மாக்­கப்­ப­டா­தது, பெரிய அள­வி­லான மற்ற மாற்­றங்­க­ளுக்கு வித்­தி­டக்­கூ­டாது என்­பது பெரும்­பாலா­னோ­ரின் கருத்து.

"குறிப்­பாக, திரு­மணம் குறித்த தற்­போ­தைய நிலைப்­பாடு தக்­க­வைத்­துக்­கொள்­ளப்­பட வேண்­டும் என பெரும்­பா­லா­னோர் விரும்­பு­கின்­ற­னர்," என்று அமைச்சர் விவ­ரித்­தார்.

திரு­ம­ணம் என்­பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்­ணுக்­கும் இடை­யிலா­னது என்­ப­தைச் சட்ட வரை­யறுப்­பதே தற்­போ­தைய நிலைப்­பாடு.

"அது மாறக்­கூ­டாது என்­ப­தையே மக்­கள் விரும்­பு­கின்­ற­னர்," என்­றார் அமைச்சர் சண்முகம்.

திரு­ம­ணம் பற்­றிய இந்த வரை­யறை­யில் இருந்து குறிப்பு எடுத்துக்­கொள்­ளும் தற்­போ­தைய கொள்­கை­களில் மாற்­றம் செய்­யப்­ப­ட­வும் மக்­கள் விரும்­ப­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.

"இந்­தக் கண்­ணோட்­டத்தை அர­சாங்­கம் புரிந்­து­கொள்­கிறது. இவற்­றுக்கு இடையே சிறந்த வகை­யில் எவ்­வாறு சம­நி­லையை எட்­டு­வது என்­பது பற்றி நாங்­கள் பரி­சீலித்து வரு­கி­றோம்," என்று திரு சண்­மு­கம் கூறி­னார்.

"எனவே இந்த விவ­கா­ரம் தொடர்­பில் நாங்­கள் இரு கேள்வி­களைக் கையா­ளு­கி­றோம். ஒன்று, சட்­டப்­பி­ரிவு 377ஏவை என்ன செய்­வது என்­பது. இரண்­டா­வது, நீதி­மன்­றத்­தில் சட்ட ரீதி­யி­லான சவால்­களில் இருந்து திரு­ம­ணம் மீதான தற்­போ­தைய நிலைப்­பாட்டை எப்­படி பாது­காப்­பது என்­பது பற்­றி­யும் நாங்­கள் பரி­சீ­லிக்­கி­றோம்," என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.

"இந்த விவ­கா­ரங்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட வேண்­டும். நாடா­ளு­மன்­றத்­தில் முடி­வு எ­டுக்­கப்­பட வேண்­டும். நீதி­மன்­றத்­தில் அல்ல," என்­றும் அவர் சொன்­னார்.

இந்த விவ­கா­ரத்­தில் தீவிர நிலைப்­பா­டு­களை எடுப்­ப­தைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு மக்­க­ளி­டம் அமைச்­சர் சண்­மு­கம் கேட்டுக்­கொண்­டார். நாட்­டிற்­காக வேறு­பாடு­களை அமை­தி­யான முறை­யில் கையா­ளு­மா­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.