காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக் கள் மூன்று பேர், கட்டுக்கட்டாகப் பணத்துடன் மேற்கு வங்காள காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.
இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்கரி ஆகிய அந்த மூன்று எம்எல்ஏக்களையும் அவர்களுடன் காரில் சென்ற இதர இருவரையும் கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.
காரில் இருந்த பணத்தைத் தங்களால் எண்ண முடியாததால் இயந்திரம் கொண்டு வந்து அவற்றை எண்ணிப் பார்த்ததாகவும் மொத்தம் ஏறக்குறைய ரூ.50 லட்சம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இது பற்றிக் கருத்து கூறிய அந்த எம்எல்ஏக்கள், பழங்குடி மக்கள் கொண்டாடும் ஒரு விழாவில், அந்த மக்களுக்கு விநியோகிப்பதற்காக, விலை மலிவாக இருக்கும் என்பதால் மேற்கு வங்காளத்தில் உள்ள புர்ராபசார் என்ற சந்தைக்குச் சென்று புடவைகளை வாங்கி வர, பணத்துடன் சென்றதாகவும் வழியில் ஹவ்ராவில் தேசிய நெடுஞ்சாலையில் தங்களைக் காவல்துறை மடக்கியதாகவும் கூறினர்.
இதனிடையே, இந்த விவகாரம் பற்றிக் கருத்து கூறிய காங்கிரஸ் கட்சி, பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்களில் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவதே பாஜகவுக்கு வேலையாகிவிட்டது என்றும் இதன் ஒரு பகுதியாகவே காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பணத்தைக் கொடுத்து பாஜக சதித்திட்டத்தை அரங்கேற்றுகிறது என்றும் கூறியது.
என்றாலும் பணவிவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கிவிட்டார்.
கைதான மூன்று எம்எல்ஏக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். உளவுத் துறை இந்த விவகாரத்தைத் தன்வசம் எடுத்துக்கொண்டு மேல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதிகாரிகள் கூறியதாக பிடிஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

