தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2021ல் வேலையைவிட்ட தாதியர் விகிதம் ஐந்தாண்டுகளில் ஆக அதிகம்

3 mins read

ஐந்­தாண்டு காலத்­தில் இல்­லாத அள­வுக்கு சென்ற ஆண்டு பொது மருத்­து­வ­ம­னை­களில் வேலையை விட்­டுச் சென்ற தாதி­யர் எண்­ணிக்கை அதி­கம் என்று சுகா­தார மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

தாதி­யர் நலன், சம்­ப­ளம், வேலைப்­பளு ஆகி­யவை குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­கு அவர் பதிலளித்தார்.

பொது மருத்­து­வ­ம­னை­களில் 7.4 விழுக்­காட்­டு தாதி­ய­ர் சென்ற ஆண்டு வேலையை விட்­ட­னர். இது கடந்த நான்காண்டுகளில் அதிகம். 2017 முதல் 2020 வரை ஒவ்­வோர் ஆண்­டும் 6%, 6.3%, 7%, 5.4% என இருந்­தது.

இதில் வெளி­நாட்­டுத் தாதி­யர் விகி­தம் இன்­னும் அதி­கம். கடந்த ஆண்டு 14.8% வெளிநாட்டுத் தாதியர் வேலையை விட்டனர். 2017 முதல் 2020 வரை இந்த விகி­தம் முறையே 8.2%, 9.1%, 9.4% 7% ஆக இருந்­தது.

"எல்­லை­கள் திறக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் அவர்­கள் நாடு திரும்ப முடி­கிறது. வெளி­நாட்டு வேலை வாய்ப்­பு­க­ளா­லும் அவர்­கள் ஈர்க்­கப்­ப­டு­கின்­ற­னர். இதன் பொருள், சிங்­கப்­பூ­ரில் குறை­வான வெளி­நாட்டு தாதி­யர்­ உள்­ள­னர். சம்­ப­ள­மும், பணிச் சூழ­லும் முக்­கி­ய­மா­னவை என்­றா­லும், இவற்றை மேம்­ப­டுத்­து­வது பற்றி தொடர்ந்து பரி­சீ­லித்தே வரு­கி­றோம். எனவே, இவையே எப்­போ­தும் மனி­த­வ­ளப் பிரச்­சி­னை­களின் ஆணி­வே­ராக இருக்­கும் என்ற முடி­வுக்கு வந்­து­வி­டக்­கூடாது," என்­றார் திரு­வாட்டி ரஹாயு.

அதிகமான தாதி­யர் வேலையை விட்டுப் போனாலும் கடந்த ஐந்­தாண்­டு­களில் பொது மருத்­து­வ­ ம­னை­க­ளின் தீவிர சிகிச்சை மற்­றும் பொது படுக்­கைப் பிரி­வு­களில் தாதி­ய­ரின் எண்­ணிக்­கை­யில் அதிக மாற்­றம் இல்லை என்று திரு­வாட்டி ரஹாயு கூறி­னார்.

அதி­க­மான வெளி­நாட்­டுத் தாதி­யர் பதவி வில­கு­வதை அடுத்து உள்­ளூர் தாதி­ய­ருக்­கு போது­மான ஓய்வு வழங்­கப்­ப­டு­வதை உறு­தி­செய்­ய­வேண்­டும் என்று கூறிய நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லுயிஸ் இங், தாதி­யர் சம்­ப­ளம் குறித்துக் கேட்டார்.

அவ­ருக்­குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி ரஹாயு, பொது - தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் மனி­த­வளத்­திற்­குப் போட்­டி­யி­டு­வ­தால் சம்­ப­ளத் தக­வல்­களை வெளிப்­ப­டை­யாக வழங்­கத் தயங்­கு­வ­தா­க­வும், மேலும் தனி­யார் துறையில் தாதி­யர் சம்­ப­ளம் குறித்த தர­வு­கள் தம்­மி­டம் இல்லை என்­றும் கூறி­னார். எனி­னும், தாதி­யர், தாதி­யர் பணிக்­கு­ழு­வின் ஆகப் பெரிய விகி­தத்­தில் இருக்­கும் மூத்த தாதி­யர் ஆகி­யோ­ரின் சம்­ப­ளத்தை அவர் வெளி­யிட்­டார்.

"தாதி­ய­ரின் சேவை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்­வதே முக்­கிய பிரச்­சினை," என்ற அவர், தாதிமை ஊழி­ய­ர­ணியை நிலைப்­ப­டுத்­து­வதற்­கான அர­சாங்­கத்­தின் திட்­டத்­தில் பல பகு­தி­கள் உள்­ளன என்­றார்.

முத­லா­வது, நிர்­வா­கச் சுமை­யைக் குறைத்து நோயாளி பரா­மரிப்­பில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் தாதி­ய­ரின் வேலைப் பொறுப்­பு­களை மதிப்­பாய்வு செய்­வது.

இரண்­டா­வது, உள்­ளூர் மற்றும் அனைத்­து­லக அளவில் போட்­டித்­தன்­மை­யு­டன் ஊதியம் இருப்­பதை உறுதி செய்­வது.

மூன்­றா­வது, மூப்­ப­டை­யும் மக்­கள் தொகை கார­ண­மாக சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் அதி­க­ரித்து வரும் தேவை­க­ளைச் சமா­ளிக்க, குடும்­பங்­களும் பரா­ம­ரிப்­பா­ளர்­களும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தில் பங்­காற்ற வேண்­டும் என்று திரு­வாட்டி ரஹாயு கேட்­டுக்­கொண்­டார்.

போது­மான தாதி­யர் இருப்­பதை உறுதி செய்ய சுகா­தார அமைச்சு பணி­யாற்றி வரு­கிறது என்ற அவர், 2019ல் கிட்­டத்­தட்ட 42,800 ஆக இருந்த பதிவு செய்­யப்­பட்ட தாதி­யர் எண்­ணிக்கை, 2021 இறு­தி­யில் 43,000 ஆக சற்று அதி­க­ரித்­துள்­ளது என்­றார்.

2014ல் ஏறக்குறைய 1,500 ஆக இருந்த உள்ளூர் தாதியர் சேர்ப்பு 2021ல் 2,100 ஆக அதிகரித்துள்ளது. இது சுகாதாரக் கட்டமைப்பில் தாதியர் எண்ணிக்கை நிலையாக இருப்பதை உறுதி செய்கிறது என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.

மேலும் நாடாளுமன்றச் செய்திகள் பக்கம் 2ல்