மலேசியா விதித்த கோழி
ஏற்றுமதித் தடை இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் வேளாண்மை, உணவுத்துறை அமைச்சர் ரோனல்ட் கியேண்டி நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் உயிருள்ள கோழிகளை
ஏற்றுமதி செய்து வந்த மலேசியா, மலேசியர்களுக்குப் போதுமான கோழிகள் இருப்பதை உறுதி செய்யவும் மலேசியாவில் கோழியின் விலையை சீராக்கவும் கோழி
ஏற்றுமதியை நிறுத்தியது.
உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக தானிய ஏற்றுமதி தடைப்பட்டதை அடுத்து, உலகளாவிய நிலையில் கோழித் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நிலைமையை சரிசெய்ய கோழி ஏற்றுமதித் தடையை மலேசியா விதித்தது.
தடை குறித்து இம்மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும் என்று டாக்டர் கியேண்டி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தடை விதிக்கப் பட்டதால் மலேசியாவில் தற்போது தேவைக்கு அதிகமான கோழிகள் இருப்பதாக அவர் கூறினார்.
கோழியின் விலையை மலேசிய அரசாங்கம் கிலோவுக்கு 9.40 ரிங்கிட் ($2.90) என நிர்ணயித்துள்ளதாகவும் மலேசியாவில் கோழிகள் அதைவிட குறைவான விலையில் விற்கப்படுவதாகவும் அமைச்சர் கியேண்டி தெரிவித்தார்.
கோழி விநியோகம், பணவீக்கம் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறிய டாக்டர் கியேண்டி, இதன் விளைவாக கோழி ஏற்றுமதித் தடையை முடிவுக்குக் கொண்டு வரும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கோழி ஏற்றுமதித் தடையை மலேசியா விதித்ததால் அதற்கு முன்பு மலேசியாவிடமிருந்து கோழிகளை வாங்கிக்கொண்டிருந்த நாடுகள் தற்போது வேறு நாடுகளிடம் அவற்றை வாங்குவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சூ கி நேற்று கடுமையாக விமர்சித்தார்.
இதனால் மலேசியாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் அதிருப்தி தெரிவித்தார். கோழி ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டதை அமைச்சர் கியேண்டி நியாயப்படுத்தி பேசினார். உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகளும் மேற்
கொண்டிருப்பதாக அவர் கூறினார்.