முடுக்கிவிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பணிகள்; சம்பளம் 20%-30% அதிகரிப்பு
கொவிட்-19 கிருமிப்பரவலால் நேர்ந்த கடினமான காலகட்டத்தைக் கடந்து இங்குள்ள கட்டுமானத் துறை நிறுவனங்கள் மீண்டும் விறுவிறுப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை அதிகரித்ததுடன் ஊழியர்களின் சம்பளங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
சிறப்புத் திறன்கள் ஏதுமில்லாத, பொதுவான கட்டுமான ஊழியர்கள் இப்போது நாட்சம்பளமாக 23 வெள்ளி ஈட்ட இயலுமென்று கூறப்படுகிறது. கிருமிப்பரவலுக்குமுன் இந்தத் தொகை 18 வெள்ளியாக இருந்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட சில கட்டுமான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் ஊதியத்தைச் சராசரியாக 20% முதல் 30% வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தன. கூடுதலான வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பதாகவும் அவை கூறின.
வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட இரண்டாம் காலாண்டுக்கான சிங்கப்பூர் பொருளியல் ஆய்வில், கட்டுமானத் துறையில் 25,200 பேர் புதிதாக வேலைக்குச் சேர்ந்ததாகத் தெரிவித்தது. முதல் காலாண்டைக் காட்டிலும் இது 116% அதிகம்.
"சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டு, இந்த ஆண்டின் முதல் காலாண்டு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், 2022ன் இரண்டாம் காலாண்டில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தத் துறையில் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் ஊழியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த நிலைக்கு ஈடாக உள்ளது," என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கட்டுமானத் துறை, கடினமான காலகட்டத்தின் இறுதியை நெருங்கிக்கொண்டிருப்பதாகவே நிறுவனங்கள் கருதுகின்றன.
இருப்பினும், பணவீக்கம், விநியோகச் சிக்கல்கள் ஆகியவற்றின் எதிரொலியாக மூலப்பொருள்களின் விலை கூடியதை அவை சுட்டிக்காட்டின. எடுத்துக்காட்டாக, கிருமிப்பரவலுக்கு முன்பு இருந்ததைவிட அலுமினியத்தின் விலை இப்போது இருமடங்காகி உள்ளது. எஃகின் விலையும் கூடிவிட்டது.
எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து புதிய ஊழியர்களைக் கொண்டுவருவது எளிதாகி இருப்பதாக நிறுவனங்கள் கூறின. முன்பு புதிய ஊழியர் ஒருவரை அழைத்துவர $2,000 செலவான நிலையில், இப்போது அது 600 வெள்ளியாகக் குறைந்துள்ளது.
இருப்பினும் புதிதாக வருவோருக்கு அனுபவம் அறவே இல்லை அல்லது மிகக் குறைவு. அவர்களுக்கு முறையான பயிற்சி தரப்பட வேண்டும் என்பதை நிறுவனங்கள் சுட்டின.
நல்ல முன்னேற்றம் காணப்பட்டாலும் கிருமிப்பரவலுக்கு முந்திய நிலைக்கு இன்னும் மீட்சி அடையவில்லை என்று சில நிறுவனங்கள் தெரிவித்தன.

