புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75, (வலது படம்) கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் கத்திக்குத்து காயத்தால் அவரது கல்லீரல் சேதமடைந்து இருப்பதாகவும் அவரது முகவர் கூறினார்.
திரு ஆண்ட்ரூ வெய்லீ எனப்படும் அவர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நல்ல செய்தியாக இல்லை. திரு சல்மான் ருஷ்டியின் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது. அவரது கையில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்படும் நிலை உள்ளது. ேமலும், அவரது கல்லீரலும் சேதமடைந்து உள்ளது," என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் திரு ஆண்ட்ரு குறிப்பிட்டார்.
நியூயார்க் நகரில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற திரு ருஷ்டியை ஆடவர் ஒருவர் கத்தியால் பலமுறை குத்தினார். அதனால் அவரது கழுத்திலும் உடலின் பல இடங்களிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இதற்கிடையே, தாக்கிய ஆடவரின் அடையாளங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஹாடி மாட்டார் எனப்படும் அந்த 24 வயது ஆடவர் நியூ ஜெர்ஸி மாநிலத்தின் ஃபேர்வியூ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க நுழைவுச் சீட்டை அவர் வாங்கினார் என்றும் நியூயார்க் மாநில காவல்துறை கூறியது.