பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டிருப்பதாக அவர் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரால் மீண்டும் பேச முடிகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நியூயார்க்கில் உள்ள ஒரு லாப நோக்கமற்ற கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ருஷ்டி உரையாற்றுவதாக இருந்தது. உரையாற்ற அவர் தயாராகிக்கொண்டிருந்தபோது ஆடவர் ஒருவர் அவரைக் கத்தியால் பத்து முறை குத்திக் காயப்படுத்தினார். தாக்குதல்காரரை அங்கிருந்த சிலர் உடனே மடக்கிப் பிடித்தனர்.
நியூ ஜெர்சியைச் சேர்ந்த 24 வயது ஹாடி மாட்டார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
ருஷ்டியை அவர் திட்டமிட்டுத் தாக்கியதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். கருத்தரங்கு நடைபெற்ற இடத்துக்கு அவர் பேருந்தில் சென்றதாகவும் கருத்தரங்கில் கலந்துகொள்ள நுழைவுச்சீட்டு வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாட்டருக்குப் பிணை வழங்கப்படவில்லை. அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்
னிலைப்படுத்தப்படுவார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ருஷ்டி எழுதிய நூல் ஒன்று இஸ்லாமிய சமயத்தைத் தூற்றுவதாகக் கூறி அவருக்குக் கொலை
மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில், ருஷ்டி தாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஈரானிய செய்தித்தாள் ஒன்றின் முதல் பக்கத்தில் செய்தி பிரசுரமானது. ருஷ்டிக்குத் தகுந்த தண்டனை கிடைத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ருஷ்டிக்கு அடுத்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கும் தண்டனை கிட்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சல்மான் ருஷ்டியைக் கத்தியால் பலமுறை குத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட ஹாடி மாட்டார். படம்: இணையம்

