சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
ஸ்ரீ மாரியம்மன் கோயில் சார்பாக இந்து அறக்கட்டளை வாரியம் இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
கோயிலின் பங்குதாரர்கள் முன்னிலையில் குடமுழுக்கு தேதி நேற்று(ஆகஸ்ட் 14) அறிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட $4 மில்லியன் செலவில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா நடந்தேறியது.
சிங்கப்பூரின் ஆகப் பழமையான இந்துக் கோயிலான ஸ்ரீ மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் தேசியச் சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தென் இந்தியாவின் நாகபட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த குடியேறிகளின் வழிபாட்டிற்காக, 1827ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டது.
கோயிலின் முதல் குடமுழுக்கு விழா 1936ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நடைபெற்றதாகக் குறிப்புகள் உள்ளன.
1949ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் இரண்டாவது குடமுழுக்கு நடைபெற்றது. இவற்றைத் தொடர்ந்து, 6 ஜூன் 1971, 6 செப்டம்பர் 1984, 19 மே 1996 ஆகிய தினங்களில் அடுத்தடுத்த குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.