இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சிஅடைந்த நாடாக இலக்கு கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியின் செங்கோட்டையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இளையர்கள் "பெரிதாக இலக்கு நிர்ணயித்து நாட்டின் வளர்ச்சிக்காக தங்களால் ஆனவற்றை தர வேண்டும் என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தி மொழியில் ஒன்றே கால் மணி நேரம் உரையாற்றிய அவர், "அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை நாம் உருமாற்ற வேண்டும், அதுவும் நம் வாழ்நாளில். இது ஒரு பெரிய தீர்மானம்தான். நம்மிடம் உள்ள சக்தியைக் கொண்டு இந்த இலக்கை நோக்கி நாம் செயல்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
உலகின் ஆறாவது பெரிய பொருளியல் நாடாகத் திகழும் இந்தியா, 2023 மார்ச் மாதம் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் 7 விழுக்காட்டிற்கு மேல் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளியல் தொடர்ந்து விரிவடைந்து 2050க்குள் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த நிலையில் வரக்கூடும் என நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள இந்தியா, சீனாவை விஞ்சி அடுத்த ஆண்டு உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவுக்கும் அதற்கு அப்பாற்பட்டும் சீனாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுக்கும் நாடாக இந்தியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருதுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவும் இந்தியாவும் "இன்றியமையாத பங்காளிகள்" எனக் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் உலகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், நேற்று முன்தினம் அதன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.

