சில்லறை விற்பனைத் துறை ஊழியர்களுக்கு மேம்பாட்டுத் திட்டம் அறிவிப்பு
சில்லறை விற்பனைத் துறையில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 8.4 விழுக்காடு முதல் 8.5 விழுக்காடு வரை சம்பள உயர்வைப் பெற இருக்கின்றனர். இத்துறையில் குறைந்த சம்பளம் பெறுவோருக்குச் சம்பள உயர்வு வழங்க முன்மொழியப்பட்டுள்ள படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் இது சாத்தியமாகிறது.
இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சம்பள உயர்வு நடப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் சில்லறை விற்பனைத் துறைக்கான முத்தரப்புக் குழுமம் நேற்று அறிவித்த பரிந்துரைகளில் சம்பள உயர்வும் ஒன்று.
சில்லறை விற்பனைத் துறையில் அனைத்து வேலைகளுக்கும் குறைந்தபட்ச பயிற்சி வழங்கப்படுவதும் பணியில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுவதும் இதர பரிந்துரைகளில் அடங்கும்.
குறைந்த சம்பளம் பெறும் உள்ளூர் ஊழியர்களுக்கு அவர்களது திறன், பயிற்சியின் அடிப்படையில் குறைந்தபட்ச மாதச் சம்பளம் படிப்படியாக உயர்வதற்கு புதிய சம்பள முறை வழிவகுக்கிறது. சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கும் 46,000 முழுநேர, பகுதிநேர சில்லறை விற்பனை ஊழியர்களை இந்தத் திட்டம் உள்ளடக்குகிறது.
படிப்படியாக உயரும் சம்பள உதவித் திட்டத்தின்கீழ் சம்பள உயர்வை அரசாங்கமும் இணைந்து வழங்கும். முதலாளிகளுக்குச் சம்பள ஆதரவை வழங்க இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்போது இதுபற்றி அறிவிக்கப்பட்டிருந்தது.
சில்லறை விற்பனை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்குவதால் முதலாளிகளுக்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் உதவும். இவ்வாண்டு மாதச் சம்பளமாக $2,500 வரை ஈட்டும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் 75 விழுக்காட்டை அரசாங்கம் வழங்கும். மாதச் சம்பளமாக $2,500 முதல் $3,000 வரை பெறும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் 45 விழுக்காட்டை அரசாங்கம் வழங்கும்.
சில்லறை விற்பனைத் துறையில் ஏறத்தாழ 87,000 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பணிபுரிவதாக இத்துறைக்கான முத்தரப்புக் குழுமத்தின் தலைவர் இயோ வான் லிங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பணியாற்றும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் இது 4.5 விழுக்காடாகும்.
சில்லறை விற்பனை ஊழியர்கள் பணியில் முன்னேறுவதற்கான தெளிவான பாதையைச் சம்பள உயர்வு முறை வழங்கும் என திருவாட்டி இயோ கூறினார்.
"மாறிவரும் சில்லறை விற்பனைத் துறையுடன் சேர்ந்து ஊழியர்களும் வளர்ச்சி அடைய இது உதவும். அதே நேரத்தில் சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஊழியர்களை ஈர்க்கவும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் இது உதவும்," என்றார் அவர்.
ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு செலவு அதிகரிக்கும் என்று கூறிவிட முடியாது என்று மனிதவள மூத்த அமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.
சம்பள உயர்வில் அரசாங்கம் பங்களிப்பதன் மூலம் வர்த்தகச் செலவுகளைச் சமாளிக்கலாம் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
சில்லறை விற்பனை ஊழியர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் படிப்படியாக உயரும் சம்பள முறையை அரசாங்கம் அறிவித்து இருப்பது வரவேற்கக்கூடிய ஒன்றென்றாலும் அது $2,000க்கும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எந்த அளவில் கணிசமாக இருக்கும் என்பது தெரியவில்லை என்றார் ஜன்னத், 35.
கடந்த 15 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்துவரும் இவர், பல கிளைகளைக் கொண்டுள்ள பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.
குடும்பங்களின் மாதாந்திர செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கு ஏற்றவாறு கூடுதலான உயர்வை அமல்படுத்தி இருக்கலாம் என அவர் கருத்துரைத்தார்.
சில்லறை விற்பனைத் துறை, படிப்படியாக உயரும் சம்பள முறையை வரவேற்கிறது என்றும் சம்பள உயர்வு வியாபாரத்தை அதிகரிக்கும் என்றும் தாம் நம்புவதாக ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை உரிமையாளர் ராஜ்குமார் சந்திரா கூறினார்.
அரசாங்க நிதியுதவியை கருத்தில்கொள்ளும்போது, சம்பள உயர்வால் முதலாளிகளுக்கு அதிக சிரமம் ஏற்படாது என அவர் நினைக்கிறார். இந்தச் சம்பள முறையால் செலவினம் உயர்ந்தாலும் அது சிறிய அளவில்தான் இருக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
கூடுதல் செய்தி:
பொன்மணி உதயகுமார்