மலேசியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 15வது பொதுத் தேர்தல் அனேகமாக இவ்வாண்டு நடத்தப்படலாம் என்று தேசிய முன்னணிக் கூட்டணித் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி கூறி இருக்கிறார். இதுகுறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு மாறுபட்ட எதிர்பார்ப்பு இருக்கலாம் என்றாலும், அம்னோ கட்சியின் ஐந்து தலைவர்களுடன் அவர் நிச்சயமாக கலந்தாலோசிப்பார் என்றார் திரு ஸாஹிட்.
அம்னோ தலைவருமான திரு ஸாஹிட், தேசிய முன்னணிக் கூட்டணியின் மகளிர் அணியான வனிதா பாரிசானின் மாநாட்டில் நேற்று முன்தினம் முடிவுரை ஆற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
"அவர் (திரு இஸ்மாயில்) கட்சிக்காரர் என்றும் மிகச் சிறந்த நேரம் எது என்பது பற்றியும் அவருக்குத் தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று திரு ஸாஹிட் சொன்னார்.
திரு ஸாஹிட், துணைத் தலைவர் முகமது ஹசான், உதவித் தலைவர்கள் இஸ்மாயில் சப்ரி, காலித் நோர்டின், மாஹ்ட்ஸிர் காலித் ஆகியோர் அம்னோவின் ஐந்து உயர்மட்ட தலைவர்களாவர்.
எதிர்காலத்தில் கூடுதல் பிரச்சினைகள் தலைதூக்கக்கூடும் என்பதால் பொதுத் தேர்தலைத் தாமதப்படுத்தக் கூடாது என்று திரு ஸாஹிட் வலியுறுத்தினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி அடைய தேசிய முன்னணிக் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்ற உத்தரவாதத்தை ஆய்வு ஒன்று வழங்க முடிந்தால் நாடாளுமன்றத்தை தாம் கலைப்பதாக பிரதமர் இஸ்மாயில் கூறியிருந்தார்.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு களத்தில் மக்களின் மனநிலையைக் கண்டறிய முழுமையான ஆய்வு ஒன்றை மகளிர் அணியான வனிதா நடத்த வேண்டும் என்று தாம் விரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
"நாம் இருளில் போருக்குச் செல்லக்கூடாது. எங்களது வலிமை பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்த ஆய்வு இல்லை என்றால் வாக்களிப்பு நாளில் எங்களால் எவ்வாறு வாக்காளர்களைப் பெற முடியும்?" என்று அவர் சொன்னார்.
இந்நிலையில், இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி, இந்த வட்டாரத்தில் பல நாடுகளை விஞ்சிவிட்டதாக நேற்று திரு இஸ்மாயில் கூறினார்.