துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கருத்து
சிங்கப்பூரில் பணவீக்கம் அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்களில் உச்சத்தை எட்டி, அதன்பின் தணியத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் சூழல், விநியோகத் தொடர் பிரச்சினைகள், நிலைத்தன்மைமிக்க பொருளியலாக மாறுவதற்கு நாடுகள் எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, பணவீக்க விகிதம் அதிகமாகவே இருக்கலாம் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் இருந்ததைப்போல், அதாவது பூஜ்ஜியம் முதல் ஒரு விழுக்காடு என்ற நிலைக்குப் பணவீக்கம் திரும்பாது என்று நிதியமைச்சருமான திரு வோங் குறிப்பிட்டார்.
"பசுமைப் பொருளியலுக்கு மாறவும் மீள்திறன்மிக்க விநியோகத் தொடரைக் கொண்டிருக்கவும் நாம் சற்று அதிக விலை கொடுத்தே ஆகவேண்டும்," என்றார் அவர்.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் ஜான் மிக்கல்த்வெய்ட்டுக்கு நேற்று முன் தினம் அளித்த நேர்காணலின்போது துணைப் பிரதமர் வோங் இவ்வாறு தெரிவித்தார்.
பணவீக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக, சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு முறை நாணயக் கொள்கையைக் கடுமையாக்கியுள்ளதைச் சுட்டிய அவர், அரசாங்கம் நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்றும் சொன்னார்.
அத்துடன், விலைவாசி உயர்வால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோருக்காக உதவித் திட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் துணைப் பிரதமர் கூறினார். உடனடி இடர்தணிப்பு உதவியாக கடந்த ஜூன் மாதம் $1.5 பில்லியன் ஆதரவுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் வரும் மாதங்களில் நடப்பிற்கு வரவிருப்பதாக அவர் சொன்னார்.
"பணவீக்கம் மேலும் மோசமானால் கூடுதல் உதவி வழங்குவோம் என்று ஏற்கெனவே உறுதி அளித்துள்ளோம்," என்றார் துணைப் பிரதமர்.
இதனிடையே, அடுத்த ஆண்டிலும் பொருளியல் வளர்ச்சிக்கான அபாயங்கள் அதிகரித்து வருவது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக திரு வோங் கூறினார்.
இவ்வாண்டு சிங்கப்பூர் பொருளியல் 3% முதல் 5% வரை உயரலாம் என்று முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தக, தொழில் அமைச்சு கடந்த வாரம் அதனை 3% முதல் 4% எனக் குறைத்துவிட்டது.
இந்நிலையில், வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் முன்னர் அறிவித்தபடி பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) அடுத்த இரு ஆண்டுகளில் தலா ஒரு விழுக்காடு உயர்த்த அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகத் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இப்போது ஏழு விழுக்காடாக இருக்கும் ஜிஎஸ்டி, வரும் 2023ஆம் ஆண்டில் எட்டு விழுக்காடாகவும் அதற்கடுத்த 2024ஆம் ஆண்டில் ஒன்பது விழுக்காடாகவும் உயர்த்தப்படவிருக்கிறது.
மூப்படையும் மக்கள்தொகையாலும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்து வருவதாலும் சரியானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அதிகம் செலவிட வேண்டியுள்ளது என்றும் திரு வோங் சொன்னார்.
அதே நேரத்தில், அரசாங்கத்தின் உதவிகளால் ஜிஎஸ்டி உயர்வு குறைந்த வருமானக் குடும்பங்களைப் பாதிக்காது என்றும் அவர் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
வருமானத்தை உயர்த்துவதற்காகப் புதிய சொத்து வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று கேட்டதற்கு, சிங்கப்பூர் எப்போதும் தனது வரிவிதிப்பு முறையை மேம்படுத்த முயன்று வருகிறது என்றும் அதே வேளையில் அது நியாயமாக இருப்பதும் படிப்படியாக இடம்பெறுவதும் உறுதிப்படுத்தப்படும் என்றும் திரு வோங் பதிலுரைத்தார்.

