மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை ரத்து செய்வதற்கான அந்நாட்டின் முன்னாள் நஜிப் ரசாக்கின் இறுதி முயற்சி தோல்வியடைந்தது.
இவ்வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து திரு நஜிப் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அம்மனு குறித்த விசாரணை நாளை இடம்பெறும் என்று மலேசிய கூட்டரசு நீதி மன்றம் தெரிவித்திருக்கிறது.
மேல்முறையீட்டிலும் தோல்வி கிட்டினால் திரு நஜிப் 12 ஆண்டு கள் சிறைத்தண்டனையை எதிர் நோக்க வேண்டியிருக்கும். அத்துடன், 210 மில்லியன் ரிங்கிட் (S$65 மி.) அபராதத்தையும் இவர் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யத் தவறினால், மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியையும் திரு நஜிப் இழக்க நேரிடும்.
தம் மீதான ஊழல் வழக்கில் கூடுதலாக ஒரு சான்றைச் சேர்க்கவேண்டுமென்ற திரு நஜிப்பின் முறையீட்டைக் கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலில் இருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி நஸ்லான், நஜிப்பிற்குச் சிறைத் தண்டனை விதித்தார்.
நீதிபதி நஸ்லான் மீதான நம்பகத்தன்மை குறித்து ஐயப்படுவதாகக் கூறி, திரு நஜிப் தரப்பு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், மலேசியாவின் தலைமை நீதிபதி மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐவர் குழு, புதிய சான்றைச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்த வழக்கு விசாரணையில் புதிய சான்றுகளைச் சேர்ப்பதற்கான முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதி மைமுன் சொன்னார்.
"எங்களது சிந்தனைக்கு எட்டியவரை இந்த வழக்கில் நீதி தவறவில்லை என்பது எங்களின் ஒருமித்த முடிவு," என்றார் அவர்.
எனவே, புதிய சான்றைச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை தள்ளுபடி செய்கிறோம் என்று அவர் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, மேல்முறையீட்டு விசாரணையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க நஜிப் தரப்பு கோரியது. தமது தரப்பு வழக்கறிஞர்கள் புதியவர்கள் என்பதால் அவர்கள் தயாராவதற்குக் கால அவகாசம் தேவை என்று தற்காப்புத் தரப்பு வாதிட்டது.
ஆனால், நீதிபதிகள் குழு அந்த வாதத்தை ஏற்கவில்லை.
இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மேல்முறையீட்டு விசாரணையில், பின்னொரு தேதியில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல பில்லியன் டாலர் மதிப்பிலான 1எம்டிபி ஊழல் தொடர்பில் திரு நஜிப் எதிர்கொள்ளும் ஐந்து ஊழல் வழக்குகளில் முதலாவதுதான் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு.
மொத்தம் ஒன்பது பில்லியன் ரிங்கிட் பணம் சம்பந்தப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கில் திரு நஜிப் மீது 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

