ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்; ஈபிஎஸ் தரப்பு திண்டாட்டம்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
இதனால் உற்சாகமடைந்த ஓபிஎஸ் தரப்பினர் நேற்று பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சி யைக் கொண்டாடினர்.
அதே சமயத்தில் பழனிச்சாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத் தினர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்பாராத பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் பதவிகள் அகற்றப்பட்டன.
மேலும் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் சென்னை உயர் நீதி மன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில் புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
இம்மாதம் 10, 11 தேதிகளில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் இவ் வழக்கை விசாரித்தார்.
அதிமுக பொதுக்குழு, கட்சி விதிமுறைகளின்படி கூட்டப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர். அதற்கான காரணங் களையும் அவர் எடுத்துரைத்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், பொதுக்குழுவை கூட்ட 2,000 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதியதாகவும் அந்த அடிப்படையில்தான் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
"ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக கூட்டம் கூட்டக்கூடாது, பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்குத் திரும்பியிருக்கிறார்.
இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகமடைந்து உள்ளனர்.
இதற்கிடையே உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த ஜெயக் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அவர், சட்டரீதியாக இதனை எதிர்கொள்வோம் என்றார்.
"பொதுக்குழுதான் சர்வ அதிகாரம் படைத்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் ஆணையர் ஒருவரை நியமித்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இது பற்றி அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை.
"தீர்ப்பின் முழு விவரம் கிடைத்ததும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்று முன்னாள் தமிழக அமைச்சருமான ஜெயக்குமார் கூறினார்.

