இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கை திரும்புவார் என்று முன்னாள் தூதர் ஒருவரை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகமான நியூஸ்ஃபர்ஸ்ட் தெரிவித்தது.
கடந்த ஜூலை மாதம் ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்து ஆக்கிரமித்தபோது அவர் நாட்டைவிட்டு வெளியேறி, மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் வந்துசேர்ந்தார்.
சிங்கப்பூர் வந்ததும் தனது அதிபர் பதவி விலகல் கடிதத்தை அவர் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கியிருந்த அவர், தாய்லாந்துக்குச் சென்றார்.
இந்நிலையில் இம்மாதம் 24ஆம் தேதி அவர் நாடு திரும்புவார் என்று திரு ராஜபக்சேயின் உறவினரான ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்காவை சுட்டிக்காட்டி நியூஸ்ஃபர்ஸ்ட் தகவல் தெரிவித்தது.
ஆனால் இதனை உறுதிப்படுத்த வீரதுங்காவையோ கோத்தபாய வையோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இலங்கை, 1948க்குப் பிறகு வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. நாட்டின் பொருளியலை தவறாகக் கையாண்ட ராஜபக்சே குடும்பத்தினர்தான் இதற்கு காரணம் என்று மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.
இலங்கையிலிருந்து வெளி யேறிய பிறகு கோத்தபாய ராஜபக்சே இதுவரை பொது இடங்களில் தலை காட்டவில்லை.
அவருக்குப் பிறகு அதிபராகி உள்ள ரணில் விக்கிரமசிங்கே, கோத்தபாய ராஜபக்சே நாடு திரும்பினால் மீண்டும் குழப்பம் ஏற்படும் என்று கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.
"அவர் நாடு திரும்புவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கான அறி குறியும் இல்லை," என்று ஜூலை 31ஆம் தேதி வால்ஸ்திரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. அவசரநிலை உத்தரவும் இன்றுடன் காலாவதியா கிறது. இந்த நிலையில் இனியும் அவசரநிலை நீட்டிக்கப்படாது என்று அதிபர் அலுவலகம் தெரிவித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.