சிங்கப்பூரின் மூன்று பிரதான உணவு விநியோக நிறுவனங்கள் இணைந்து, மின்னிலக்கத் தளங்களைப் பிரதிநிதிக்கும் தொழில்துறை சங்கம் ஒன்றை நிறுவியுள்ளன.
உணவு விநியோகத் தொழில்துறையின் நடைமுறைகளை வலுப்படுத்தவும் அதன் தரத்தை உயர்த்தவும் 'டிபிஐஏ' எனப்படும் மின்னிலக்கத் தளங்கள் தொழில்துறை சங்கத்தின் வழியாக கிராப், டிலிவரூ, ஃபுட்பாண்டா இணைந்து செயல்பட உள்ளதாக நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
அத்துடன் விநியோக பங்காளிகள், வர்த்தகர்கள் ஆகியோரின் குரலாக எதிரொலிக்கும் தீர்வுகளை, உருவாக்குவதற்கு அரசாங்கத்துடனும் இதர பங்குதாரர்களுடனும் சங்கம் சேர்ந்து பணியாற்றும் என்று கூறப்பட்டது.
உணவு விநியோக ஊழியர்களின் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றின் தொடர்பில் தலைசிறந்த நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் ஒருங்கிணைந்த தொழில்துறை கோட்பாடுகளைத் தான் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்தது.
மின்னிலக்கத் தளம்சார்ந்த ஊழியர்களுக்கான ஆலோசனைக் குழு, அதன் இறுதிக்கட்ட விவாதங்களைப் பரிசீலித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மனிதவள அமைச்சு கடந்த செப்டம்பர் மாதம் அமைத்த இந்த ஆலோசனைக் குழு, மின்னிலக்கத் தளங்களை வருமானத்திற்காக நம்பியுள்ள ஊழியர்களுக்கு மேலும் சிறந்த பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்து, அந்தந்த மின்னிக்கத் தள நிறுவனங்களுடன் ஆலோசனைக் குழு பேசி வருகிறது.
விருப்புரிமை அடிப்படையிலான உணவு விநியோக ஊழியர்கள், டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஓய்வுக்காலச் சலுகைகள், போதுமான வீடமைப்பு, பணிக்காலக் காய இழப்பீடு, பேரம் பேசும் அதிகாரம் போன்ற அம்சங்களை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் இவ்வாண்டுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் சட்டபூர்வ மாற்றங்கள் செய்யப்படலாம்.
மூன்று உணவு விநியோகத் தளங்களின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து, சிங்கப்பூரின் பொருளியல் சூழலுக்கு ஏற்றதொரு மின்னிலக்கத் தளத் தொழில்துறையை உருவாக்கி, வளர்ச்சி காண்பதே சங்கத்தின் நோக்கமாக இருக்கும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.