எதிர்காலத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும் லீ சியன் லூங் உரையாற்றுவார்
பிரதமர் லீ சியன் லூங் நாளை தேசிய தினப் பேரணி உரையாற்றுகிறார். கொவிட்-19 கிருமித்தொற்று பற்றிய சிங்கப்பூரின் அனுபவம் குறித்து அவர் பேரணி உரையில் பேசுவார்.
சிங்கப்பூர் எதிர்காலத்தை எப்படி பாதுகாப்பானதாக ஆக்க முடியும் என்பது பற்றியும் அவர் விளக்குவார். அங் மோ கியோவில் இருக்கும் ஐடிஇ மத்திய கல்லூரியில் திரு லீ பேரணி உரையாற்றுவார்.
அந்த உரைக்குத் திரு லீ ஆயத்தமானதை நேற்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு முன்குறிப்பில் அவர் விளக்கினார்.
கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முழுமூச்சில் பேரணி உரையாற்றப்போவது இப்போதுதான் என்று அவர் தெரிவித்தார்.
திரு லீ 2021ல் தனது பேரணி உரையை மீடியாகார்ப் நிறுவனத்தின் ஒளிப்பதிவுக் கூடத்தில் இருந்து ஆற்றினார். 2020ல் பேரணி உரை ரத்தானது.
ஒவ்வோர் ஆண்டின் மிக முக்கிய அரசியல் உரை பேரணி உரைதான் என்று கருதப்படுகிறது.
திரு லீ, தமது உரையில் பொருளியல் சவால்கள் பற்றியும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்தும் உரையாற்றும் வாய்ப்புள்ளதாக கவனிப்பாளர்கள் கூறி உள்ளனர்.திரு லீயின் தேசிய நாள் செய்தியில் அந்த இரண்டுமே முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருந்தன.
இந்த வட்டாரம், வரும் ஆண்டுகளில் முன்பு இருந்ததைப் போல அந்த அளவுக்கு அமைதியாகவும் நிலையாகவும் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதைச் சமாளிக்கும் வகையில், சிங்கப்பூரர்கள் மனரீதியில் ஆயத்தமாக வேண்டும் என்று அந்தச் செய்தியில் திரு லீ குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல, பணவீக்கமும் வட்டி விகிதங்களும் பழையபடி குறைவதற்கான வாய்ப்பும் குறைவு என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, பிரதமரின் பேரணி உரை பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கைக் கல்லூரியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டெரன்ஸ் ஹோ, பிரதமர் தமது உரையில் பணவீக்கம் பற்றி பேசக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
திரு லீ வாழ்க்கைச் செலவு பற்றியும் பேசுவார் என்று கூறிய இணைப் பேராசிரியர், சிங்கப்பூரின் கொவிட்-19 சூழ்நிலை பற்றிய புதிய தகவல்களும் அந்த தொற்றுநோயைக் கையாள அரசாங்கம் எடுத்துவரும் அணுகுமுறை குறித்தும் பேரணி உரையில் திரு லீ விளக்கம் அளிப்பார் என்றும் கூறினார்.
முன்னேறும் சிங்கப்பூர் தேசிய கலந்துரையாடல் குறித்தும் திரு லீ விவரிப்பார் என்றும் இணைப் பேராசிரியர் குறிப்பிட்டார்.
பேரணி உரையை நேரடியாக காண
பிரதமர் லீ சியன் லூங் ஆற்றும் பேரணி உரை நாளை மாலை 6.45 மணிக்குத் தொடங்கும். அவர் முதலில் மலாய், பிறகு சீன மொழியில் உரையாற்றுவார்.
திரு லீயின் ஆங்கில உரை இரவு 8 மணிக்குத் தொடங்கும். அவரின் உரையை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளும் வானொலி நிலையங்களும் ஒளி, ஒலி பரப்பும். தமிழ் ஒளி, ஒலி பரப்பு வசந்தத்திலும் ஒலி 96.8 எஃப்எம் வானொலியிலும் மாலை 6.45 முதல் இரவு 8 மணி வரை இடம்பெறும்.
பிரதமர் அலுவலக யூடியூப் (www.youtube.com/pmosingapore), பிரதமரின் ஃபேஸ்புக் (www.facebook.com/leehsien loong), ரீச் ஃபேஸ்புக் (www.facebook.com/REACHSingapore) ஆகியவற்றிலும் Mewatch.sg, cna.asia, சிஎன்ஏ யூடியூப், 8வேல்ட்.காம் ஆகிய இணைய ஒளி வழிகளிலும் பேரணி உரையைக் காணலாம்.
நேரடி ஒளிபரப்பைத் தவறவிட்டவர்கள் ஆகஸ்ட் 22 முதல் www.youtube.com/pmosingapore அல்லது www.pmo.gov.sg/ndr என்ற முகவரியில் பேரணி உரையைக் காணலாம்.

