இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா வட்டாரத்தில் உள்ள பன்கே பிஹாரி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் மாண்டனர்.
இதில் காயமடைந்த குறைந்தது ஆறு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆக்ராவில் இருந்து ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தொலைவில் மதுரா நகர் உள்ளது. அங்குள்ள பன்கே பிஹாரி கோயிலில் நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
கோயிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டைக் காண ஏராளமான பக்தர்கள் அங்கு வரத் தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
கோயில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் வேகமாக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர்.
கூட்ட நெரிசல் காரணமாக பின்னிரவு 2 மணியளவில் ஆலயத்தில் இருந்த சிலர் மூச்சுத் திணறி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்ததாக மதுரா நகர் மூத்த காவல்துறை அதிகாரி அபிஷேக் யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதனால் நிலைமையைச் சமாளிக்க மக்கள் உள்ளே வருவதை காவல்துறையினர் தடுக்கவேண்டிய சூழல் உருவானது.
அங்கு ஆண் பக்தர் ஒருவரும் பெண் பக்தர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்க மதுரா வந்திருந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தச் சம்பவம் குறித்து தாம் மிகுந்த வேதனை அடைந்து உள்ளதாகக் கூறினார்.
காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

