இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
அபாயங்கள் நிறைந்த இப்போதைய உலகச் சூழலில் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பது அவசியம் என்றும் இனம், சமயம், வருமானம், சமூக வேற்றுமைகள், பிறப்பிடம் போன்றவை நம்மைப் பிளவுபடுத்தவிடக்கூடாது என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலிலிருந்து மீண்டு வரும் நிலையில் உலகப் பிரச்சினைகளால் உத்திபூர்வமாகவும் பொருளியல் ரீதியாகவும் எழும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்த சமூகமாக இருப்பது அவசியம் என்று தமது 17வது தேசிய தினப் பேரணி உரையின் முக்கியக் கருத்தாக பிரதமர் வலியுறுத்தினார்.
தங்களின் சொந்த நலன்களுக்காக நமது பலவீனங்களைப் பயன்படுத்தி, நம்மிடம் ஆதிக்கம் செலுத்த முயலும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இணையத்தில் படிக்கும் எல்லாவற்றையும் நம்பிவிட வேண்டாம் என்று தமது சீன, ஆங்கில உரைகளின்போது அவர் குறிப்பிட்டார்.
ஈராண்டுகளுக்குப் பிறகு கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததைப்போல், தொழில்நுட்பக் கல்விக் கழக மத்தியக் கல்லூரி வளாகத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுக்குமுன் பிரதமர் தமது பேரணி உரையை நிகழ்த்தினார்.
தேசிய சேவையின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் ஆயுதப்படையையும் உள்துறைக் குழுக்களையும் வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் வைத்திருக்கவேண்டும் என்ற அவர், நமது தற்காப்பு நம் கையில்தான் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோசமடைந்துவரும் உறவு, உக்ரேன்மீதான ரஷ்யப் படையெடுப்பு, அதனால் ரஷ்யாவிற்கும் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பகைமை போன்ற பிரச்சினைகளை அவர் சுட்டினார்.
'எதிர்காலத்தை உறுதிசெய்வோம்' என்பது பிரதமரின் மலாய், சீன, ஆங்கில உரைகளின் கருப்பொருளாக அமைந்தது.
அதன்படி, சிங்கப்பூரின் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து அவர் பேசினார். நான்காம் தலைமுறைத் தலைமைத்துவம் சிங்கப்பூர் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தயாராக இருக்கின்றது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒவ்வொரு சிங்கப்பூரரின் கனவு மெய்ப்படவும் நாம் காண விரும்பும் சிங்கப்பூரை உருவாக்க ஒருமித்த முடிவை எடுக்கவும் 'முன்னேறும் சிங்கப்பூர்' திட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
சிங்கப்பூரர்கள் என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமைகொள்ள வேண்டும் என்றும் தேசிய அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அறைகூவல் விடுத்தார்.
"நம்முடைய பல்லினக் கலாசாரங்களும் சமய மரபுகளும் நமது அடையாளத்தின் முக்கிய அங்கம் என்றாலும், முதலில் நாம் சிங்கப்பூரர்கள்," என்றார் அவர்.
"நாம் சிங்கப்பூரர்கள். அதனால் நாம் பெருமைப்படக்கூடிய இல்லத்தைக் கட்ட ஒன்றிணைந்து உழைப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்," என்றும் அவர் சொன்னார்.
சவால்களை எதிர்கொண்டு வெற்றிகாண்பதற்கு ஒன்றிணைந்த மக்கள், திறன்மிக்க தலைமைத்துவக் குழு, மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான மிகுந்த நம்பகத்தன்மை ஆகிய மூன்று அடிப்படைக்கூறுகளும் மிக அவசியம் என்றார் பிரதமர்.
சிறிய நாடு என்பதால் தவறுகளுக்குத் துளியும் இடமில்லை என்று எச்சரித்த திரு லீ, சிங்கப்பூர் நிலைத்திருக்க சரியான தலைவர்கள் தேவை என்றார்.
'4ஜி குழுவிற்கு ஆதரவு தருக'
இதுவரை 57 ஆண்டுகளில் மூன்று தலைமுறையாக சிங்கப்பூரர்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள் கிடைத்துள்ளனர் என்ற பிரதமர், வெற்றிக்கான நமது வழிமுறையை அடுத்த தலைமுறைக்கும் அதனைத் தாண்டியும் நீட்டிக்க வேண்டியது நமது கடமை என்றார்.
அதனால் தலைமைத்துவ மாற்றம் மிக முக்கியம் என்று அவர் சொன்னார்.
அடுத்த பிரதமரை அடையாளம் காணும் திட்டம் கொவிட்-19 சூழலால் தள்ளிப்போனாலும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கை தங்களது தலைவராக இளைய அமைச்சர்கள் ஏற்றுள்ளதை அடுத்து தற்போது அது தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாக திரு லீ கூறினார்.
திரு வோங்கிற்கும் அவரது தலைமைத்துவக் குழுவினருக்கும் சிங்கப்பூரர்கள் ஆதரவளித்து வருவது மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த '4ஜி' குழுவிற்கு மக்கள் தங்களின் முழு ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சாங்கி ஐந்தாம் முனையம், சாங்கி ஈஸ்ட் நகர்ப்புற வட்டாரம், துவாஸ் கப்பல் நிறுத்துமிடம், பாய லேபார் மறுமேம்பாடு போன்ற திட்டங்கள் குறித்த அண்மைய தகவல்களையும் தமது உரையின்போது அவர் விரிவாக விளக்கினார்.
உள்நாட்டு விவகாரங்கள் குறித்த பல்வேறு அம்சங்களும் பிரதமரின் உரையில் இடம்பெற்றன.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம், அதனை எதிர்கொள்ள நடுத்தர, குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் ரொக்க வழங்கீடுகள், பற்றுச்சீட்டுகள் உள்ளிட்ட பல ஆதரவுத் திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார். விலையேற்றம் தொடர்ந்தால் மேலும் உதவ தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
உலகளவில் பொருளியல் நிலை மாறிவருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை நாம் கண்ட முழுவீச்சில் இடம்பெற்ற உலகமயமாதல், பெருகிவந்த அனைத்துலக வணிகம் போன்றவற்றை இனி எதிர்பார்க்க முடியாது என்றார்.
"நாடுகள் தங்களின் சொந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் பொருளியல் மேம்பாட்டிலும் மறுசீரமைப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று பிரதமர் வலியுறுத்திச் சொன்னார்.
பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்
♦ பெரும்பாலான உட்புறங்களில் கட்டாய முகக்கவச விதிமுறை தளர்த்தப்படும்
♦ ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377A சட்டப்பிரிவு நீக்கப்படும்
♦ வெளிப்புறச் சூழல்களால் ஏற்படும் அபாயங்களையும் பொருளியல் சவால்களையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வலியுறுத்து
♦ பாய லேபார் ஆகாயப் படைத்தளம் இடமாற்றம் செய்யப்பட்டு, அவ்விடத்தில் 150,000 வீடுகள் கட்டப்படும்
♦ சாங்கி 5ஆம் முனையக் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும். துவாஸ் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், மேலும் மூன்று கட்டப் பணிகள் அடுத்த 20 ஆண்டுகளில் முடிவுறும்
♦ உலகம் முழுவதுமிருந்தும் சிறந்த திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்
♦ சவால்களை எதிர்கொள்ள, மூன்று முக்கியமான அடிப்படைக்கூறுகளை சரியாக வைத்திருத்தல்
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை 2022: சவால்களை எதிர்கொள்ள ஆயத்தமாகும்படி வலியுறுத்து

