ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாகக் கருதும் 377A சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அச்சட்டப்பிரிவு நீக்கப்பட்டாலும் திருமணம் எனும் பந்தம் பேணிக்காக்கப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் மேலும் கூடியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூர் உள்ளிட்ட பல சமுதாயங்களில் ஒத்த பாலீர்ப்புடைய ஆண்கள் இப்போது கூடுதலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்று சொன்னார்.
குற்றவியல் சட்டத்தின் 377A பிரிவை நீக்குவது குறித்து, கடைசியாக 2007ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஓரினச் சேர்க்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அச்சட்டப்பிரிவு சட்டப் புத்தகத்தில் இருக்கும் என்றும் அதைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கம் அப்போது முடிவெடுத்தது.
ஆனால் இப்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மனப்போக்குகள் குறிப்பிடத்தக்க வகையில் மாறி உள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, அரசாங்கம் 377A பிரிவை நீக்கி, ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றச்செயலாக வகைப்படுத்தாது என்று திரு லீ தெரிவித்தார்.
"பெரும்பாலான சிங்கப்பூரர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள். எனவே, இவ்வாறு செய்வது சரியென்று நம்புகிறேன். இது, தற்காலப் போக்குக்கு ஏற்புடையதாகச் சட்டத்தைக் கொண்டுவரும்; ஒத்த பாலீர்ப்புடைய ஆண் சிங்கப்பூரர்களுக்குச் சற்று மனநிம்மதி தரும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.
அதே வேளையில், இச்சட்டப்பிரிவு நீக்கப்படுவதன்மூலம் சமுதாய நெறிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது எனப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அக்கறை கொண்டுள்ளதையும் அவர் சுட்டினார்.
தற்போதுள்ள குடும்பம் சார்ந்த நமது அணுகுமுறையும் சிங்கப்பூர் சமுதாயத்தில் ஏற்கெனவே உள்ள வழக்கங்களும் விழுமியங்களும் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணங்கள் மட்டுமே சட்டப்படி அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், திருமண உறவின் இந்த நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் எதிர்க்கப்படலாம் என்று அவர் சொன்னார்.
"சிங்கப்பூரைப் பொறுத்தவரை இவை சட்டப் பிரச்சினைகள் அல்ல, அரசியல் பிரச்சினைகள் என்பதால், இத்தகைய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்க நீதிமன்றங்கள் தகுந்த தளமல்ல என்று நான் கருதுகிறேன்," என்றார் திரு லீ.
ஆகையால், நீதிமன்றங்களில் அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் இந்தச் சட்டபூர்வ திருமண அமைப்புமுறை எதிர்க்கப்படுவதில் இருந்து அரசாங்கம் அதனைப் பாதுகாக்கும் என்றும் அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வோம் என்றும் அவர் சொன்னார்.
இச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்தை மேற்கொள்வோம் என்றும் பிரதமர் கூறினார்.
இந்து ஆலோசனை மன்றத்தின் நிலைப்பாடு
கட்டாயம் அல்லது வற்புறுத்தலின்பேரில் இல்லாமல், தங்களது விருப்பத்துடனும் பரஸ்பர இணக்கத்துடனும் கூடியதாக இருக்கும் பட்சத்தில் தனிமனிதர்களின் நடத்தையானது அவர்களின் தனிப்பட்ட, சொந்த உரிமை என்பதால் 377A சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என இந்து ஆலோசனை மன்றம் தெரிவித்துள்ளது.
ஆயினும், திருமண உறவையும் 377A சட்டப்பிரிவு நீக்கத்தையும் தான் வெவ்வேறாகக் கருதுவதாலும் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலேயே நிகழ வேண்டும் என்று தான் நம்புவதாலும் திருமண உறவைப் பாதுகாக்க மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவை முறைப்படுத்தவோ வலுப்படுத்தவோ எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் வரவேற்பதாக மன்றம் கூறியது.
377A சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று பிரதமர் லீ அறிவித்ததை அடுத்து, இவ்விவகாரத்தில் மன்றத்தின் நிலைப்பாட்டைத் தமிழ் முரசு கேட்டறிந்தது.
பள்ளிகளில் பாலியல் கல்வியின்மூலம், ஒருவரின் பாலியல் ஈர்ப்பைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் கடவுளின் படைப்பு என்று கருதி, அவர்களை மதிப்பதற்குக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் என்றும் அந்த மன்றம் தெரிவித்தது.

