இம்மாதம் 29ஆம் தேதி முதல் பெரும்பாலான உட்புறங்களிலும் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பள்ளிகளிலும் இனி மாணவர்கள் முகக்கவசங்கள் அணியத் தேவை இருக்காது.
இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் கடந்த வாரம் நடந்த தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டிருந்தார்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 பணிக்குழுவின் இன்று(ஆகஸ்ட் 24) நேரடியாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படும் கூட்டம் அதிகமாக இருக்கும் உட்புறங்கள், அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடியவர்கள் அடிக்கடி வந்துபோகும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் கூறினார்.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள், அவசரகால வாகனகங்கள் போன்ற பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பேருந்துகள், எம்ஆர்டி, எல்ஆர்டி, உள் போக்குவரத்து முனையங்கள் போன்ற பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் ஆக்கப்படும்.
தனியார் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், டேக்சிகள் போன்ற தனியார் போக்குவரத்துகளில் முக்கக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை.
விமான நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அதே போல சில எஸ்ஐஏ பயணங்களில் முகக்கவசம் தேவை இல்லை.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்வோர், அடுத்த திங்கட்கிழமை முதல் குறிப்பிட்ட சில பயணங்களின்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.
இனிமேல் தனிப்பட்ட பாதுகாப்பு இடைவெளி தேவை இல்லை. அனைத்து ஊழியர்களும் வேலையிடத்துக்குத் திரும்பலாம். குழுவாகக் கூடும் எண்ணிக்கையிலும் இனி கட்டுப்பாடுகள் இருக்காது.
எனினும் வர்த்தகங்கள் பாதுகாப்பு கருதி தங்கள் வேலையிடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்காலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் கூறினார்.
முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் முடிந்தவரை குறிப்பாக கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் தொடர்ந்து முகக்கவசங்கள் அணியும்படி அமைச்சுகள்நிலை பணிக்குழுவினர் மக்களைக் கேட்டுக்கொண்டனர்.
சிங்கப்பூரில் கடந்த 2020 ஏப்ரலில் கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த மார்ச்சில் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் பலவும் தளர்த்தப்பட்டது. அதில், வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை என்பதும் ஒன்று.