மோனலிசா
தமிழ்மொழியை வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல தொழில்நுட்பத்தில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என்கிறார் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் எஸ்ஜி மின்னிலக்க உபகாரச் சம்பளம் பெற்ற திரு விஜயகுமார் அருள் ஓஸ்வின், 29.
தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் இணையப் பாதுகாப்புப் பொறியாளராக பணிபுரிந்துவரும் திரு அருள், இந்த உபகாரச் சம்பளத்தின்மூலம் இணையப் பாதுகாப்புத் துறையில் முதுநிலைப் பட்டம் பயில விரும்புகிறார்.
சிங்கப்பூர்த் தமிழ்க் கலாசார மையத்தில் நிர்வாகத் துறைத் தலைவராக இருக்கும் இவர், உலகளாவிய மின்னிலக்கச் சூழலில் சிங்கப்பூர் தனிச்சிறப்புமிக்க அறிவார்ந்த மின்னிலக்க தேசமாக உருவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதில் தமிழ் மொழியும் இணைந்து பயணம் செய்யவேண்டும் என்பதே இவரது கனவு.
மின்னிலக்கத் துறையில் அறிவார்ந்த சிங்கப்பூரை உருவாக்குவதில் இளையர்களை ஊக்குவிக்க அத்துறையில் முன்னேறிவரும் இளையர்கள் 107 பேருக்குத் தொடர்பு, தகவல் அமைச்சும் அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமமும் கூட்டாக இணைந்து பல்வேறு பிரிவுகளில் உபகாரச் சம்பளம் வழங்கின. இந்நிகழ்ச்சி மரினா பே சேண்ட்சில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சரும் அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ, மின்னிலக்கத் துறையில் தலைசிறந்த தலைவர்களை உருவாக்குவதிலும் அவர்கள் நீண்டகாலத் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் அத்துறை சார்ந்த பல்வேறு திறமை சார்ந்த வாய்ப்புகளை அளிப்பதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர்களான டாக்டர் ஜனில் புதுச்சேரியும் திரு டான் கியட் ஹாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொடர்பு, தகவல் அமைச்சின் தகவல் சேவை உபகாரச் சம்பளம் பெற்ற குமாரி அஞ்சலி இளங்கோவன், 19, லண்டன் பொருளியல், அரசியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு பயிலவிருக்கிறார்ர்.
தொடக்கக் கல்லூரி விடுமுறைக் காலத்தில் கல்வி அமைச்சின் மரபுடைமை நிலையத்தில் ஐந்து மாதங்கள் வேலைப்பயிற்சி மேற்கொண்டார் குமாரி அஞ்சலி. 1980, 1990களில் சிங்கப்பூரில் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் பற்றிய வரலாற்றை ஆய்வுசெய்து, அந்நிலையத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்த அனுபவம் தமக்கு வரலாறு மீதிருந்த ஆர்வத்தைத் தூண்டியதாக இவர் சொன்னார்.
"இந்த உபகாரச் சம்பளம் எனக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. வரலாற்றையும் கடந்து வந்த பாதையையும் அறிந்துகொள்வது எதிர்காலப் பயணத்தைத் திறம்படத் திட்டமிடப் பேருதவியாக இருக்கும் என்பதாலேயே வரலாற்றுப் பாடத்தைப் படிக்கவுள்ளேன்," என்றார் குமாரி அஞ்சலி.
"பணியிடைக்கால மாற்றம் என்பது ஒரு கடினமான பயணம். பல்வேறு ஐயங்கள், தயக்கங்கள், சுற்றத்தாரின் கேள்விகளுக்கு இடையில் மனந்தளராமல் துணிவுடன் தொடர்ந்து முன்னேறுவது சவாலாகவே இருந்தது," என்று கூறினார் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் எஸ்ஜி மின்னிலக்க உபகாரச் சம்பளம் பெற்ற திரு ர. ஆனந்த், 35.
இந்த உபகாரச் சம்பளத்தினால் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் 'வடிவமைப்பு மூலம் பாதுகாப்பு' துறையில் முதுநிலைப் பட்டத்தை அண்மையில் இவர் முடித்தார்.

