அரசாங்க, தனியார் வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 1.2 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் அடுத்த மாதம் $100 பணம் பெறும். 'குடும்பப் பயனீட்டு வரவு' என்ற திட்டத்தின்கீழ் அந்தப் பணம் குடும்பங்களுக்குக் கிடைக்கும்.
குறைந்தபட்சம் குடியுரிமை பெற்ற ஒருவரைக் கொண்ட, வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்கள் அனைத்தும் இந்த உதவிக்குத் தகுதி பெறும்.
இந்தப் பணம் அடுத்த மாதம் எஸ்பி சேவைகள் பயனீட்டுக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். நிதி அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில் குறைந்த வருமான குடும்பங்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் உதவும் நோக்கத்தில் கடந்த ஜூன் மாதம் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் $1.5 பில்லியன் திட்டத்தை அறிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் இந்தப் பணம் கொடுக்கப்படுகிறது. எஸ்பி குழுமம் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்த இந்தப் பணத்தை குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணத்தைச் செலுத்தியது போக அந்த $100ல் பாக்கித் தொகை இருந்தால் அதை பின்னர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வாழும் ஏறத்தாழ 950,000 வீடுகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டும் பயனீட்டுச் சேமிப்பு திட்டமும் (யுசேவ்) ஏற்கெனவே நடப்பில் இருந்து வருகின்றன.
இதற்கு அப்பாலும் இப்போது பணம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சு விளக்கியது.
மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்க்கும்போது வீவக நான்கறை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு 2022 நிதி ஆண்டு முழு வதற்கும், அவற்றின் பயனீட்டுக் கட்டணத்தில் ஏறத்தாழ ஐந்து மாதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய தேவை இராது என்று அமைச்சு விளக்கியது.
அதேபோல, மூவறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட ஏழு மாத கட்டணக் கழிவு கிடைக்கும் என்று நிதி அமைச்சு தனது அறிக்கையில் தெரி வித்து உள்ளது.