தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் இந்திய அரசியலில் இரும்பு தலைவி என்று வர்ணிக்கப்பட்டவருமான ஜெயலலிதா மரணம் பற்றி கடந்த ஐந்தாண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சிறப்பு ஆணையம் தன் அறிக்கையை நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.
அந்த ஆணையத்தின் தலைவரான முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, தான் தயாரித்த 608 பக்க தமிழ் அறிக்கையும் 600 பக்கங்களைக் கொண்ட ஆங்கில அறிக்கையையும் நேற்று முதல்வரிடம் ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"மொத்தம் 154 பேரிடம் விரிவான விசாரணையை நடத்தி முடிவை அறிக்கை ரீதியில் முதல்வரிடம் தாக்கல் செய்துவிட்டோம். அதை வெளியிடுவதா, இல்லையா என்பது தமிழக அரசைப் பொறுத்தது," என்றார் ஆறுமுகசாமி.
இதனிடையே, அந்த அறிக்கை நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நேற்று தகவல்கள் தெரிவித்தன. அதோடு, அது விரைவில் சட்டமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் தெரியவந்தது.

