உலகளாவிய பீதியை ஏற்படுத்தாமல் உள்நாட்டு பணவீக்கத்தைக் குறைக்கும் உத்தியாக, நொய்யரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கும் சாத்தியம் குறித்து இந்தியா ஆராய்கிறது.
இது நாட்டின் அரிசி ஏற்றுமதியில் 20 விழுக்காட்டுக்கும் குறைவானது. இது உலகளாவிய உணவு நெருக்கடியை மோசமாக்கும் என்றாலும் ஒட்டுமொத்தமாக அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதைவிட நொய்யரிசிக்கு மட்டும் தடைவிதிப்பது தாக்கத்தைக் குறைக்கும்.
இந்தியாவில், இந்த அரிசி சமையலுக்கும் கால்நடை உணவுக்கும், எத்தனால் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. உலக அளவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் 40 விழுக்காடு இங்கிருந்து வருகிறது. கடந்த ஆண்டு 150 நாடுகளுக்கு 17.71 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
எனவே அதன் ஏற்றுமதிக் கொள்கையில் ஏற்படும் எந்த மாற்றமும் அரிசி உணவைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் பில்லியன் கணக்கான மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2007-2008 உணவு நெருக்கடியின்போது, இந்தியா அரிசி ஏற்று மதியை நிறுத்தியது. வியட்னாம் போன்ற பிற உற்பத்தியாளர்களும் இந்தியாவைப் பின்பற்றி ஏற்றுமதியை நிறுத்தின. இதனால் ஏற்பட்ட பீதியால் மக்கள் அரிசியை வாங்கிச்சேர்க்க விரைந்தனர். அரிசி விலை ஒரு டன்னுக்கு யுஎஸ்$1,000 (சிங்கப்பூர் வெள்ளி 1,400)க்கும் அதிகமாக ஏறியது. இது இப்போதுள்ள விலையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அதிகரித்து வரும் உலகளாவிய பணவீக்கத்தைச் சமாளிக்க இந்தியா இந்த ஆண்டு சர்க்கரை, கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்தியது.
நொய் அரிசி மீதான தடையால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே பாதிக்கப்படும். அரிசி தீட்டப்படும்போது உடையும் அரிசி இது. இதன் விலை குறைவாக இருப்பதால், விலங்குத் தீவனத்துக்காக சீனாவும், சில ஏழை ஆப்பிரிக்க நாடுகளும் இதனை இறக்குமதி செய்கின்றன.
மோசமான மழை, விளைச்சலைப் பாதிக்கும் மர்மமான "குள்ள" நோய் காரணமாக நெல் பயிர் செய்கை இந்த ஆண்டு இந்தியாவில் குறைந்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெல் பயிர் செய்கை 13% குறைந்துள்ளது.
நாட்டின் நெல் கொள்முதலில் 25 விழுக்காட்டை உற்பத்தி செய்யும் உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் ஆகியவை பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அடங்கும். விதைப்பு காலமான ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை இல்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஒரு மர்ம நோய் பரவி வளர்ச்சியைக் குறைத்தது. இதுகுறித்து அறிவியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு மதிப்பீட்டின்படி 5% முதல் 15% பயிர்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் நெல் உற்பத்தி உயர்ந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு சாதனையாக 130.2 பில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது.
அனைத்திந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம், கடந்த ஆண்டின் விளைச்சல், வரும் மாதங்களில் நாடு முழுவதுக்கும் போதுமானது என்று கூறியுள்ளது.

