இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவினங்களைக் குறைக்க உள்ளார் நிதி அமைச்சருமான அதிபர் ரணில் விக்ரமசிங்கே. வெள்ளிக்கிழமை வரை வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அனைத்துலக பண நிதியத்தில் கடன் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.
பயணத்துறையை பெருமளவு சார்ந்துள்ள இலங்கை 1948இல் சுதந்திரம் பெற்ற பிறகு, மிக மோசமான பொருளியல் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.
ஜூலை மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில், கோத்தபாய ராஜ பக்சே அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பதவியை ஏற்ற ரணில் விக்கிரமசிங்கே, இடைக்கால வரவு செலவுத் திட்டம், அனைத்துலக பண நிதியத்துடன் உடன்பாடு செய்யப்பட்ட நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.
மக்கள் நல்வாழ்வுக்கும் கடன்களுக்கான வட்டியை திருப்பி செலுத்துவதற்கும் பாதுகாப்பு உள்ட பல செலவினங்கள் "சில நூறு பில்லியன்" ரூபாய்களாகக் குறைக்கப்படும் என்றும் கூறினார்.
மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடைக்கால வரவுசெலவுத் திட்டம் மூலம் நிவாரணம் வழங்க ஆர்வமாக உள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கை 3.9 டிரில்லியன் ரூபாய் (S$15.1 பில்லியன்) செலவினத்தை இலக்காகக் கொண்டிருந்தது.
"இடைக்கால பட்ஜெட் 2022க்கான 9.9% பற்றாக்குறையை இலக்காகக் கொண்டிருக்கும். இது முந்தைய 12%ஐவிட குறைவாக இருக்கும்," என்று முதலீட்டு நிறுவனமான ஏசியா செக்யூரிட்டிஸின் மேக்ரோ பொருளாதார நிபுணர் லக்ஷினி பெர்னாண்டோ கூறினார்.

