குறைந்த வருமானம் ஈட்டும் 159,000 உள்ளூர் ஊழியர்கள் பயன்பெறுவர்
குறைந்த வருமானம் ஈட்டும் முழு நேர உள்ளூர் ஊழியர்கள் 159,000 பேர் இன்றுமுதல் குறைந்தபட்ச மாத ஊதியமாக $1,400 பெறுவர்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் வராத தங்களது உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தது $1,400 ஊதியம் வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு ஊதிய மாற்றங்கள் இன்றுமுதல் நடப்பிற்கு வருகின்றன.
அவற்றுள் முதலாவது, சில்லறை விற்பனைத் துறையைச் சேர்ந்த குறைந்த வருமான ஊழியர்களுக்கான படிப்படியான சம்பள உயர்வு முறை. இதன்மூலம் ஏறக்குறைய 19,000 முழுநேர ஊழியர்கள் பயனடைவர்.
இதுகுறித்த அறிவிப்பு கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியானது.
இரண்டாவதாக, துப்புரவு, பாதுகாவல் மற்றும் நிலவனப்புத் துறைகளைச் சேர்ந்த 19,000 உள்ளக ஊழியர்களுக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறை நீட்டிக்கப்படும்.
இப்போதைக்கு, அத்துறைகளில் பணியாற்றும் வெளிநிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே அம்முறை நடப்பில் இருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், இன்றுமுதல் நடப்பிற்கு வரும் படிப்படியான சம்பள உயர்வு முறை திட்டத்தின்மூலம் ஏறத்தாழ 197,000 முழுநேர குறைந்த வருமான ஊழியர்கள் பலனடைவர்.
மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலை விவரங்களின் அடிப்படையில் தங்கள் ஊழியர்கள் படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் வருகிறார்களா என்பதை நிறுவனங்கள் மதிப்பிட வேண்டும்.
படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் தங்கள் ஊழியர்களின் வேலைப் பொறுப்புகளையும் நிறுவனங்கள் மனிதவள அமைச்சின் தொழில்சார் வேலைவாய்ப்பு தரவுத்தொகுப்பு இணையவாயிலில் தாக்கல் செய்ய வேண்டும்.
இம்மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும், பல்வேறு படிப்படியான சம்பள உயர்வுத் தேவைகள் குறித்து நிறுவனங்களுக்கு எடுத்துரைப்பதில் முத்தரப்புப் பங்காளிகள் கவனம் செலுத்துவர்.
மாற்றங்களைச் செய்யவும் விதிமுறைகளுக்கு இணங்கவும் நிறுவனங்களுக்குக் கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சு கூறியது.
இடைப்பட்ட காலகட்டத்தில் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்காத நிறுவனங்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இதனிடையே, இன்னும் அதிகமான துறைகளுக்குப் படிப்படியான சம்பள உயர்வு முறையை விரிவுபடுத்தும் சாத்தியம் தொடர்பில் உரிய பங்காளிகளுடன் இணைந்து என்டியுசி ஆராய்ந்து வருகிறது என்று மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி அலிமன் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மனிதவளத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகரித்தும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தியும் உற்பத்தித்திறனைக் கூட்ட வேண்டும் என்று நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்து இருக்கிறது.
குறைந்த வருமான ஊழியர்களைக் கைதூக்கிவிட ஒட்டுமொத்த சமூக அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும் தேசிய முதலாளிகள் சம்மேளனம் குறிப்பிட்டது.

