அனைத்துலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமான 'ஸ்டார்பக்ஸ் கார்பரேஷன்' முதல்முறையாக ஓர் இந்திய வம்சாவளியினரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்வுசெய்துள்ளது.
காப்பி ஜாம்பவானாக திகழும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து 55 வயது லக்ஷ்மன் நரசிம்மன் இணைவார். அறிமுகக் காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்த பிறகு, அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் முழுமையாகத் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கான திட்டங்களை வகுத்து வந்த ஹவர்ட் ஷுல்ட்ஸ், 69, தமது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி ஆலோசகராகப் பொறுப்பேற்பார். பயனீட்டாளரை மையமாகக் கொண்ட தொழில்துறையில் பல ஆண்டுகால அனுபவமுள்ளவராக திரு லக்ஷ்மன் கருதப்படுகிறார். 'ரெக்கிட் பென்கிஸர்' நிறுவனத்தில் இவர் செப்டம்பர் 2019 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
அதற்குமுன், அருந்துவதற்குத் தயார்நிலையில் உள்ள பானங்களை விற்பனை செய்யும் ஸ்டார்பக்ஸ் பங்காளி நிறுவனமான 'பெப்சிகோ இன்க்'ல் நிர்வாகியாக இருந்தார். 'மெக்கின்சி & கோ' ஆலோசனை நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், வருடாந்திர அடிப்படைச் சம்பளமாக திரு லக்ஷ்மனுக்கு $1.3 மில்லியன் வழங்கப்பட உள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

