நிச்சயமற்ற உலகச் சூழ்நிலையில் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று கூறியுள்ளார்.
இரு நாடுகளும் பல துறைகளில் உயர்நிலையில் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இருநாடுகளின் உறவு, அணுக்கமான மக்கள், குடும்ப உறவுகளை அடித்தளமாகக்கொண்டது என்றார் அவர்.
மலேசியாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார் திரு வோங்.
மலேசிய அமைச்சர்களுடனான தனது உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் ஒரு வாய்ப்பு என்றார் திரு வோங். சிங்கப்பூர் அதன் தலைமைத்துவ மாற்றத்தை மேற்கொண்டு வரும் நிலையில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து கண்டறியும் என்றும் கூறினார்.
எரிசக்தி, உணவு, பொருளியல் மந்தநிலை, பணவீக்கம் ஆகியவற்றுடன் இரு நாடுகளும் புதிய உலகச் சூழ்நிலையை எதிர்கொள்வதால் இருதரப்பு உறவு மேலும் முக்கியத்துவம் பெறும் என்றார் அவர்.
"கடந்த 30 ஆண்டுகளில் நாம் அனைவரும் அனுபவித்த உலகமயமாக்கலின் பொற்காலம் அநேகமாக முடிந்துவிட்டது, மேலும் நாம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறோம். இது அதிகம் புவிசார் அரசியல் சூழலால் ஆனது. மேலும் உலகப் பொருளியல் இன்னும் சிதறக்கூடும்," என்று திரு வோங் கூறினார்.
நிதியமைச்சருமான திரு வோங், ஜூன் மாதம் துணைப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மலேசியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரத்துவப் பயணம் இது.
நெருங்கிய அண்டை நாடுகள் என்ற முறையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
"எனினும், நட்பு, இரு நாடுகளுக்கு இடையேயும் தனிப்பட்ட நிலையில் உள்ள நெருங்கிய உறவுகள் காரணமாக, வேறுபாடுகளை வெளிப்படையாக விவாதிக்க முடிகிறது," என்றார் அவர்.
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவை நேற்று சந்தித்த துணைப் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான, நீண்டகால, பன்முக உறவை மறுஉறுதிப்படுத்தினார்.
மலேசியா, சிங்கப்பூர் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உறுதுணை யாக இருந்து, பரஸ்பர நன்மைக்காக சமூக உறவுகள், வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஆக உயரிய நிலைக்கு வலுப்படுத்துவது முக்கியம் என்று மாமன்னர் கூறினார்.
இம்மாதப் பிற்பகுதியில் மாமன்னரின் பயணத்தை சிங்கப்பூர் எதிர்பார்த்திருப்பதாக திரு வோங் கூறினார்.
இரு நாடுகளுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை இருதரப்பும் ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர், உட்லண்ட்ஸ், ஜோகூர் பாரு இடையே யான ஆர்டிஎஸ் திட்டத்தின் நிறைவை எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார்.
மின்னிலக்கம், பசுமைப் பொருளியலில் ஒத்துழைப்பு மற்றும் சிங்கப்பூரின் பேநவ், மலேசியாவின் டூயட்நவ் கட்டண முறைகளை இணைப்பது குறித்தும் விவாதித்து வருகின்றனர். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை நேற்றுமுன்தினம் திரு வோங் சந்தித்தார்.

