மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் (பிசிஎஃப்) நடத்தும் பாலர்பள்ளிகளில் அடுத்த ஆண்டு இறுதி வாக்கில் புதிதாக சுமார் 2,500 இடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த இடங்கள் பிடா டாரி, தெம்பனிஸ் நார்த் போன்ற தேவை அதிகமாக இருக்கும் இடங்களில் கிடைக்கும்.
அதோடு மட்டுமின்றி, இந்த அறநிறுவனத்தின் 320 ஸ்பாக்கல் டாட்ஸ் நிலையங்களிலும் சிறப்புச் செயல்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக, 36,000க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு வியூக சிந்தனைத் திறனும் பிரச்சினைகளைத் தீர்க்கும் தேர்ச்சிகளும் கற்று கொடுக்கப்படும்.
இந்தச் செயல்திட்டம் 2024ஆம் ஆண்டுவாக்கில் தொடங்கும்.
மசெக சமூக அறநிறுவனம் ஓர் அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. இந்த அறநிறுவனம், ஸ்டெமி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், புத்தாக்கம், தொழில் முனைப்புச் செயல்திட்டம் ஒன்றை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
இந்தத் திட்டத்தில் இப்போது 13,500 சிறார்கள் பலனடைகிறார்கள். இது கிட்டத்தட்ட 50,000 சிறார்கள் பலனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் அறநிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, மக்கள் செயல் கட்சியின் சமூக அறப்பணி அமைப்பான அந்த நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் பல முதியோர் பராமரிப்பு நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இத்தகைய நிறுவனங்கள் எத்தனை புதிதாக அமைக்கப்படும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் 2024 அல்லது 2025ஆம் ஆண்டில் அந்த அறநிறுவனம் தன்னுடைய எட்டாவது முதியோர் பராமரிப்பு நிலையத்தைத் திறப்பதற்கான திட்டங்களைக் கொண்டிருக்கிறது.
பிசிஎஃப் சமூக அறநிறுவனம், 360 பாலர்பள்ளிகளை நடத்துகிறது. அவற்றில் 40,000 சிறார்கள் பயில்கிறார்கள். கிட்டத்தட்ட 870 முதியோர்களுடன் கூடிய ஏழு முதியோர் பராமரிப்பு நிலையங்களையும் அது நடத்துகிறது.
பாலர் பள்ளிகளில் பலவற்றையும் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் சிறார்களிடம் வேறுபட்டு இருக்கும்.
அவர்கள் அனைவருக்கும் ஒரே வாய்ப்புகளை அளிக்கும் வகையில், இந்த அறநிறுவனத்தின் 260 பாலர்பள்ளிகளில் குறைந்தபட்சம் ஓர் ஊழியருக்குப் பயிற்சியளிக்கப்படும்.
அவர், 2023 தொடக்க வாக்கில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு உதவி தேவைப்படக்கூடிய சிறார்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி கிடைக்க ஏற்பாடுகளைச் செய்வார்.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நேற்று பிசிஎஃப் சமூக அறநிறுவனத்தின் வருடாந்திர குடும்ப தினம் நடந்தது. அதில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நிகழ்ச்சியில் உரையாற்றி னார். மசெக சமூக அறநிறுவன பாலர்பள்ளியில் தான் படித்ததாகத் தெரிவித்த அவர், வருங்காலத்தில் அந்த அறநிறுவனத்தின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சேர வேண்டிய நிலை தமக்கு வந்தாலும் வரலாம் என்றார்.
"என் வாழ்வின் தொடக்கத்திலும் பிற்பகுதியிலும் என்னுடனே இந்தச் சமூக அறநிறுவனம் எப்போதுமே சேர்ந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்," என்றார் அவர்.

