தீவு விரைவுச்சாலையில் நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 28 வயது வாகன ஓட்டுநர் மாண்டுவிட்டார்.
கிளமெண்டி அவென்யூ 6க்குள் செல்லும் துணைச்சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி தங்களுக்கு அதிகாலை 6 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அந்த வேன் வாகனம் சறுக்கிக் கொண்டு ஓடி சாலைத் தடுப்பை உடைத்து விபத்துக்குள்ளாகிவிட்டது என்று நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையின் புலன்விசாரணை தொடர்கிறது.
இதனிடையே, கெப்பல் ரோடும் கேன்டோன்மண்ட் லிங்கும் சந்திக்கும் இடத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஓட்டுநரான 50 வயது ஆடவர். அவருக்கு காலிலும் நெஞ்சிலும் காயங்கள் ஏற்பட்டன.
ஒரு டாக்சியும் காரும் சம்பந்தப்பட்ட இந்த விபத்து பற்றி சனிக்கிழமை இரவு சுமார் 8.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காயமடைந்தவர்களில் டாக்சியில் இருந்த இதர நான்கு பயணிகளும் அடங்குவர். அவர்களுடன் 55 வயது வாகன ஓட்டுநர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தன் டாக்சி ஓட்டுநருக்கும் பயணிகளுக்கு கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் உதவி வருகிறது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

