அடுக்குமாடி வீடுகளின் பொதுத் தாழ்வாரங்களில் பொருள்களைக் குவித்துவைக்கும் பிரச்சினையைச் சமாளிக்கும் பொருட்டு, வரும் மாதங்களில் அரசாங்க அமைப்புகளும் நகர மன்றங்களும் அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்று தேசிய வளர்ச்சி மூத்த அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தாழ்வாரங்களில் பொருள்களைக் குவித்துவைப்பதால் ஏற்படும் அபாயங்கள் பற்றிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று அவர் கூறினார்.
அண்மையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் இரண்டு தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்றில் ஆடவர் ஒருவர் மாண்டுபோனார். அவற்றில் ஒரு வீட்டிற்கு வெளியே பொதுத் தாழ்வாரத்திலும் இன்னொரு வீட்டினுள்ளேயும் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பொருள் குவித்து வைக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக 2014ஆம் ஆண்டு பல அமைப்புகள் அடங்கிய ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம் இவ்வாண்டு முற்பாதியில் 210 சம்பவங்களில் பொருட்குவிப்பின் தீவிரத்தன்மையைக் குறைக்க முடிந்ததாக திருவாட்டி சிம் ஆன் குறிப்பிட்டார்.
மீண்டும் பொருள்கள் குவியாமல் தடுக்க அவ்விடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
அச்சம்பவங்களில், பொதுச் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து இல்லாதபடி, பொருட்குவியல் 'பாதுகாப்பான அளவிற்கு' குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்தது.
இப்போதைக்கு அத்தகைய 260 சம்பவங்கள் தொடர்பில் பொருட்குவியல் மேலாண்மை முதன்மைக் குழு பணியாற்றி வருவதாக திருவாட்டி சிம் ஆன் கூறினார். "பொருள்களை அகற்ற, அவற்றைக் குவித்து வைத்துள்ளோரின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்தச் சிக்கலான சம்பவங்கள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளன," என்றார் அவர்.
ஆனாலும், குவித்து வைக்கப்பட்டுள்ள பொருள்களை அகற்றுவது தொடர்பில் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் உரியவர்களை நாடவும் அவர்களை இணங்க வைக்க வேண்டியுள்ளது என்றும் சில நேரங்களில் சமூகப் பணியாளர்களையும் மனநல வல்லுநர்களையும் உதவிக்கு அழைக்க வேண்டியுள்ளது என்றும் திருவாட்டி சிம் ஆன் கூறினார்.
"பொதுச் சுகாதார, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, பொருள்களைக் குவித்து வைத்துள்ளவர்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில், தொண்டூழியர்களின் துணையுடன் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்போம்,' என்றார் அவர்.
இருப்பினும், தாங்கள் குவித்து வைத்துள்ள பொருள்களைக் கைவிட சிலர் விரும்பாமல் போனால், பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
பொருள்களைக் குவித்து வைக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் உள்ள சவால்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

