இவ்வாண்டு நான்காம் காலாண்டில் கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் பாதி திட்டமிட்டுள்ளன.
வட்டார அளவிலான அரசியல் சூழல், பொருளியல் ஆகியவற்றில் சவால்கள் எழுந்துள்ள போதிலும் இந்நிலை உருவெடுத்திருப்பதாக ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் பணியில் ஈடுபடும் 'மேன்பவர்குரூப்' நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்தது.
"நீண்ட காலமாக நிரப்பப்படாத வேலைகளுக்குப் புதிய ஊழியர்களைச் சேர்க்கும் முயற்சிகளை நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வருவதால் சிங்கப்பூரில் வேலை நியமனப் பணிகள் சூடுபிடித்தபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று 'மேன்பவர்குரூப்' நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவின் நிர்வாகியான திருவாட்டி லிண்டா டியோ கூறினார்.
510 நிறுவனங்களைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது.
தொழில்நுட்பம், நிதி ஆகிய துறைகளில் மட்டுமின்றி 'கஸ்டமர் சர்விஸ்' எனும் வாடிக்கையாளர் சேவைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கும் ஊழியர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
அதே வேளையில் கல்வி, சுகாதாரம், சமூக சேவை, கட்டுமானம் போன்ற துறைகளில் தேவை குறைவாகக் காணப்படுகிறது.

