சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் கொவிட்-19 கொள்ளைநோயைச் சமாளிக்க $72.3 பில்லியனைச் செலவிட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் பொது சுகாதார நடவடிக்கைகளுக்காக $13.4 பில்லியனும் ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஆதரவு நல்குவதன் மூலம் வேலைகளைப் பாதுகாக்க $50.6 பில்லியனும் செலவிடப்பட்டதாக நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று மன்றத்தில் கூறினார்.
இவற்றுடன், நேரடியாக குடும்பங்களுக்கும் சமூக ஆதரவு நடவடிக்கைகளுக்கும் $8.3 பில்லியன் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தொகை அனைத்தும் 2020 மற்றும் 2021 நிதி ஆண்டுகளில் செலவிடப்பட்டதாகக் கூறிய அவர், இரண்டு முக்கிய காரணங்களுக்காக அரசாங்கம் முன்னதாகக் கடப்பாடு கொண்டிருந்த $100 பில்லியனுக்கும் குறைவாக இந்த செலவுகள் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
"முதல் காரணம், இறுக்கமான கடன் சந்தையை எதிர்பார்த்து 2020ஆம் நிதி ஆண்டில் அரசாங்கம் தொடக்கமாக கடன் மூலதனத்தை ஒதுக்கியது.
"சிங்கப்பூர் நிறுவனங்களுக்கான சிங்கப்பூர் நாணயக் கடன் வசதித் திட்டத்தின்கீழ், பங்குபெறும் நிதி நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் குறைந்த வட்டியிலான மூலதனத்தை வழங்கியிருந்ததால் இந்தக் கடன் மூலதன ஒதுக்கீடு செய்யப்பட்டது.
"இரண்டாவது காரணம், பொது சுகாதாரச் செலவினத்தில் குறைவான பயனீடு. இறங்கு
முகம் ஏற்படும் சாத்தியத்தைச் சமாளிக்க வளங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இருப்பினும், பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளாலும் சிங்கப்பூரர்களின் ஒத்துழைப்பாலும் இறங்குமுக நிலவரம் தவிர்க்கப்பட்டது.
"அத்தகைய குறைவான பயனீட்டு அம்சம் கூடுதல் நிதியளிப்பு மூலம் சரிக்கப்பட்டப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான, விழிப்புநிலை உயர்த்தப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அறிவிக்கப்பட்ட உதவித்தொகுப்பின் நிதியே அது," என்று குமாரி இந்திராணி விளக்கினார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி ஃபூ மீ ஹார் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்துப் பேசுகையில் அவர் இந்த விவரங் களை அளித்தார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நிதி அமைச்சராக இருந்தபோது 2020ஆம் ஆண்டு ஐந்து வரவுசெலவுத் திட்ட அறிக்கைகளை வெளியிட்டார். அவற்றில் கொவிட்-19 சமாளிப்பு செலவு களுக்காக $100 பில்லியன் கடப்பாட்டை அவர் அறிவித்திருந்தார். இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை அரசாங்கத்தின் கடந்தகால நிதி சேமிப்பிலிருந்து எடுக்கப்படும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது.
மொத்தமாக $52 பில்லியனை சேமிப்பிலிருந்து எடுக்கத் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆயினும், கடந்த பிப்ரவரி மாதம் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த தற்போதைய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், 2020 முதல் 2022 வரையிலான மூன்று நிதி ஆண்டுகளுக்கும் சேர்த்து $42.9 பில்லியன் மட்டுமே எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு
வதாகக் கூறினார்.
இதற்கிடையே, கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து பொதுத் துறை அமைப்புகள் பாடங்களை வரைந்துகொண்டு, அவசரகாலத்திற்கான நிதி நடைமுறைகளை வலுப்படுத்தும் என்று குமாரி இந்திராணி தெரிவித்தார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் கொள்ளைநோய் தொடர்புடைய கொள்முதல் மற்றும் செலவினங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் சோதனைகளையும் நிதி அமைச்சு மறுஆய்வு செய்யத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தவறாகத் தொகையளிக்கப்பட்டதா என்பதையும் பரிவர்த்தனைகள் நேர்மையாக நடைபெற்றுஉள்ளனவா என்பதையும் அறிய தணிக்கைச் சோதனை முறைகளை சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் நடத்தி வருகின்றன," என்றாரவர்.

